சென்னை, ஏப்.30 தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் பணிகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதை உறுதி செய்ய, இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு பார்வையாளர் வீதம், மொத்தம் 234 வெளிமாநில அய்ஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
வருகை: நியமிக்கப்பட்ட அனைத்து பார்வையாளர்களும் மே 2-ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு நேரில் வந்து பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
கையெழுத்து கட்டாயம்: வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்று முடிவுகளும் இந்தப் பார்வையாளர்களின் ஒப்புதல் மற்றும் கையெழுத்திற்குப் பிறகே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இறுதி முடிவு: வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும், வெற்றி குறித்த இறுதி அறிவிப்பும் பார்வையாளரின் சான்றொப்பம் பெற்ற பின்னரே அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 62 மய்யங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குப்பதிவு இயந்திரங்கள், மே 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும்.காலை 8:30 மணி: வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணத் தொடங்கப்படும். முதல் சுற்று நிலவரம் காலை 9 மணி முதல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணும் பணியில் சுமார் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான தீவிரப் பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மய்யங்களில் சிசிடிவி கேமராக்கள், தடுப்பு வேலிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படைப் பாதுகாப்பு என மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

