1916இல் நீதிக்கட்சி தொடங்கப் பட்ட பின், பார்ப்பனரல்லாதார் மாநாடு ஆண்டுதோறும் சென்னை மாகாணம் எங்கும் நடத்தப்பட்டது. 1917இல் திருநெல்வேலி, ராமநாத புரம் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களின் மாநாடு, திருநெல்வேலி கோமதிவிலாஸ் திரையரங்கில் 1917 நவம்பர் 30 அன்று எழுச்சியோடு கூடியது.
இம்மாநாட்டையொட்டி திருநெல்வேலி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு அழகுற அமைந்திருந்தது. காணுமிடம் எல்லாம் மாநாட்டு விளம்பரங்கள், மாநாட்டிற்கு அழைக்கும் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் என அமைந்திருந்தது.
“‘ஜாதி’ எனும் தீயசக்தி ஒழிக!”, “பார்ப்பனரல்லாத மக்களே! உங்களது நலன்களையும், உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” போன்ற கருத்தாழமிக்க – படிப்போரை உணர்ச்சி பொங்கச் செய்யும் வாசகங்கள் கொண்ட வளைவுகள் தேரடித் தெருக்களிலும், சாலை இணைப்புகளிலும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டிற்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தெலாப்ரோல் ஜமீன்தார், ராவ்பகதூர் பி.தியாகராய செட்டி, செல்லப்பள்ளி குமாரராஜா, திரு.டி.எத்திராஜ முதலியார், ஓ.கந்தசாமி செட்டி மற்றும் பி.பி.துரைசாமி முதலியார் போன்ற எண்ணற்ற பார்ப்பனரல்லாத தலைவர்கள் வந்தனர். பார்ப்பனரல்லாத மக்கள் மாபெரும் வரவேற்பினை அவர்களுக்கு அளித்தார்கள்.
வருகை தந்த தலைவர்கள் அனைவரும் எட்டையபுரம் ராஜா அரண்மனையில் தங்க வைக்கப்பட்டனர். கடும் மழைக்கிடையே மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டு மேடையில் ராவ்பகதூர் பி.தியாகராய செட்டி அவர்களுடன் பல தலைவர்கள், ஜமீன்தார்கள் அமர்ந்திருந்தனர். மாநாட்டின் வரவேற்புரையை சிங்கம்பட்டி ஜமீன்தார் ஆற்றினார். அவரது வரவேற்புரையிலிருந்து முக்கியமான செய்திகள் பின்வருமாறு:
“இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் சமூகங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையினைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் அண்மையில் எத்தனை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினாலும் சரி, ஜாதி வாரியான பிரதிநிதித்துவம் என்பன போன்ற பாதுகாப்புகள் அளிக்கப்படுவதே நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும் என்று நான் உறுதியாக உணர்கிறேன்.
சட்டமன்றங்கள், உள்ளாட்சி மன்றங்களில் ஜாதிவாரியான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. அதை நிறைவேற்றுவதே நமது கடமையும் ஆகும்.
நல்வாய்ப்பு பெற்று நல்ல வசதியுடன் இருக்கும் நமது சமூக உறுப்பினர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், உதவி தேவைப்படும் தகுதி பெற்ற மற்ற சமூகத்தினர்கள் கல்விக்கும் தேவையான நிதியுதவியை அளிக்க வேண்டும்.
அதற்காக, “திராவிடர் மறுமலர்ச்சி நிதி” ஒன்றை உடனடியாகத் துவங்க வேண்டும். அந்த நிதியினை கிராமத்திலுள்ள மக்களுக்கு வழங்கி கல்வியில் பார்ப்பனரல்லாதார் முன்னேற வழி காண வேண்டும்.”
மேற்கண்டவாறு நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் தொடக்கக் கல்வி வளர்ச்சி குறித்த தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும்.
பார்ப்பனரல்லாதார் மாநாடு சிறப்போடு நடைபெற தனது செல்வம், உழைப்பு முதலியவற்றை வழங்கிய பெருமைக்குரியவர் சிங்கம்பட்டி ஜமீனாவார்.
பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய நீதிக்கட்சியில் அங்கம் பெற்ற ஜமீன்தார்கள் மற்றும் பல செல்வந்தர்கள் சமூக மாற்றத்திற்கு பெருந்துணையாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்றால் மிகையில்லை.

