சிறீவைகுண்டம், ஏப்.7- தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் தனது வேட்புமனுவை பூர்த்திசெய்யாமல் கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவரிடம் கொடுத்ததால், அந்த வேட்புமனுவை அவரிடமே திருப்பி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
எலி படத்தில் வங்கிக்கு கொள்ளையடிக்க தங்கள் சகாக்களோடு செல்லும் நடிகர் வடிவேலு தப்பும் தவறுமாக விண்ணப்பம் எழுதி கொடுத்திருப்பதாக கூறி வங்கி மேனேஜர் அவரை சரியாக எழுதி கொண்டுவரும்படி திருப்பி அனுப்புவார்
அதனையொட்டிய ஒரு நிஜ சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டத்தில் அரங்கேறியுள்ளது. சிறீவைகுண்டம் தவெக வேட்பாளராக கேரளாவில் லாட்டரி சீட்டு முகவராகவும் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட அன்னை சரவணன் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய தங்களது ஆதரவாளர்கள் 5 பேருடன் சிறீவைகுண்டம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வந்தார்
அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்தது முதலே காவல் துறையினரைக் கண்டதும் சற்று பதட்டத்துடன் காணப்பட்டார் வேட்பாளர் சரவணன். அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலரான செந்தில்வேல் முருகனிடம் வேட்புமனுவை கொடுப்பது போல போட்டோவுக்கு போஸ் எல்லாம் கொடுத்தார்.
வேட்புமனுவை வாங்கி பார்த்த தேர்தல் நடத்தும் அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த மனுவில் எந்த ஒரு தகவலும் நிரப்பபடாமல் காலியாகவே இருந்தது. வேட்பாளரின் கையெழுத்து கூட போடப்படவில்லை, உடனடியாக அந்த மனுவை அப்படியே சரவணனிடம் திருப்பிக் கொடுத்து முழுமையாக நிரப்பிக் கொண்டு வருமாறு தெரிவித்தார்
“ சார், டாக்குமெண்ட் ஏதாச்சும் இணைக்க வேண்டுமா… என்றும், “3 நிமிட வேலை கொஞ்சம் நிரப்பி கொடுங்க சார்…” என்றும் அவரது ஆதரவாளர் ஒரு அதிகாரியிரம் சிபாரிசு செய்தார், அதற்கு, “மாலை 3 மணி வரை இங்கே தான் இருப்பேன் போய் ஒழுங்கா நிரப்பி கொண்டு வாருங்கள்” என்று அவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பினார் அந்த அதிகாரி
இதையடுத்து வந்த வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்தாக திரும்பிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் தவெக வேட்பாளர் சரவணன்.

