தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவது தி.மு.க.வுக்காக அல்ல – மக்கள் நலனுக்காக, தமிழ்நாட்டின் மானம், உரிமைகளை மீட்கவே!

1920 இல் தொடங்கி 1937 வரை நல்லாட்சி புரிந்த நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சியே அண்ணா தலைமையில் அமைந்த தி.மு.க. ஆட்சி!

நல்லாட்சி புரிந்து, இரண்டாவது முறையும் ஆட்சியில் அமரப் போகிறது ‘திராவிட மாடல்’ ஆட்சி!

மற்ற மாநிலங்களில் பி.ஜே.பி. செய்த வஞ்சக வலை விரிப்புகள், பெரியார் மண்ணில் செல்லுபடியாகாது!

வாகை சூடுவோம் – புதிய வரலாறு படைப்போம்!

கொளுத்தும் வெயிலானாலும் நமது பிரச்சாரப் பயணம் தொடரும், வெற்றி நமதே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

Contents

 

கடந்த அய்ந்தாண்டுகளாக மக்கள் நல ஆட்சி புரிந்த ‘திராவிட மாடல்’ அரசு வரும் தேர்தலிலும் வெற்றி பெறுவது நிச்சயம்! இந்த வெற்றி தளபதி மு.க.ஸ்டாலின் என்ற தனி மனிதருக்கானது அல்ல –  வருங்கால சந்ததியினர் ஒளிமயமாக வாழ, தமிழ்நாட்டின் மானம் காக்கவே! கொளுத்தும்  கோடை வெயிலானாலும் நம் பயணம் தொடரும் – வெற்றி நமதே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1916 இல் பார்ப்பனரல்லாதார் உரிமைகளைக் குறிப்பாக கல்வி, உத்தியோக உரிமைகளை வென்றெடுக்கவே ‘நீதிக்கட்சி’ என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேசனார் ஆகிய திராவிடப் பெருமக்களால் தொடங்கப் பெற்றதாகும்.

1920 இல் ஆட்சிக்கு வந்து
17 ஆண்டுகள் சமூகநீதி ஆட்சியாம் நல்லாட்சி புரிந்த நீதிக்கட்சி!

1920 இல் தேர்தலுக்கு நின்று, வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன் இரண்டாவது பிரதம அமைச்சராக பானகல் அரசர் பொறுப்பேற்று, ஒடுக்கப்பட்டோர், பெண்கள் – அனைவரின் கல்வி, உத்தியோக வாய்ப்புகளை மீட்டுத்தரும் ஆட்சியை சிறப்பாக நடத்தி, 17 ஆண்டுகள் – ஆட்சியில் இருந்தது – ‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்’ காரணமாக அது 1937 இல் தோல்வியைக் கண்டது.

அக்கட்சி தோற்றதைக் கண்டு ஆரியப் பார்ப்பன அரசியல்வாதிகள் தொடங்கி, ஆதிக்க வருணாசிரமவாதிகள்வரை மகிழ்ச்சியடைந்தனர். அக்கட்சியை ‘‘500 அடி ஆழத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டோம்’’ என்று கூறி அற்ப மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அதற்குத் தக்க பதிலடியை முப்பது ஆண்டுகால இடைவெளிக்குப்பின், 1967 இல், ஆரியத்தின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி, ‘‘எனது பாட்டன் நீதிக்கட்சி ஆட்சியின் நீட்சியே’’ என்று கூறி, ஆட்சியமைத்து அறிஞர் அண்ணா வரலாறு படைத்தார்.

அந்த வரலாற்றின் நீட்சியே அண்ணா தலைமையில் அமைந்த தி.மு.க. ஆட்சி!

அந்த வரலாற்றில், அறிஞர் அண்ணா ஆட்சியின் முப்பெரும் சாதனைகளைத் தொடர்ந்து, திராவிட ஆட்சியினை மேலும் பலம் வாய்ந்த கொள்கைக் கோட்டையாகக் கட்டினார் – பலமுறை ஆட்சி பொறுப்பேற்ற  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

அவருக்குப் பின், இன்றைய இணையற்ற நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘கலைஞருக்குப்பின், தமிழ்நாடு வெற்றிடமே’’ என்று கூறியவர்களுக்குத் தக்க பதிலடியைத் தனது ஆளுமைத் திறத்தின்மூலம், ‘‘நாளொரு சாதனை’’ என்று 5 ஆண்டுகளில், அடுக்கடுக்கான திட்டங்களைச் செயற்படுத்தினார்! ஒன்றிய அரசான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி அரசு திட்டமிட்ட ஒத்துழையாமை, பழிவாங்கும் ஓரவஞ்சனை, நிதி மறுத்தல், அடாவடி ஆளுநர்மூலம் அன்றாடம் ‘அரசியல் குடைச்சல்களை’ மலைபோல் ‘திராவிட மாடல்’ அரசுக்கு ஏற்படுத்தினார்கள்.

இரண்டாவது முறையும் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியே!

அவற்றைப் பனிபோல் கரையச் செய்து, வரலாறு படைத்து, இரண்டாவது முறையாகத் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சிதான் என்பதை நிலை நிறுத்திக் காட்ட, தனது கடும் உழைப்பு, அரசியல் சாதுரியம், தக்கார் தகவிலாரை அடையாளம் காணுதல், இவை எல்லாவற்றிற்கும் மேலாகத், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பலன் பாயாத வீடுகளும், குடும்பங்களும் தமிழ்நாட்டில் கிடையாது என்ற வரலாற்றைப் படைத்து, வைரமாக ஒளிவீசச் செய்துள்ளார்! சாத னைகள் தொடரவும், நம் உரிமைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கவும், டில்லி ஆதிக்கத்திற்குத் ‘‘தமிழ்நாடு ஒருபோதும் தலை குனியாது; குனிய விட மாட்டேன்’’ என்று அறைகூவல் விடுத்து, தேர்தல் களத்தில் ‘திராவிடச் சங்கநாதத்தினைச் செய்து வருகிறார்! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமையேற்று, வெற்றிக் கனி பறித்து, மீண்டும்  சென்னை கோட்டையில், இரண்டாம் முறையாக வரலாற்றைத் தொடங்கிட, அவரது கடும் உழைப்பும், அயராத ஆணித்தர உற்சாக ஊக்கமூட்டும் தேர்தல் உரைகளும் கண்டு, தமிழ்நாட்டு அனைத்துத் தரப்பு வாக்காளர்களும், தெளிவடைந்து, மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிமூலம்தான் மீட்சியைப் பெற முடியும் என்பதை உணர்ந்து வருகின்றனர்!

மற்ற மாநிலங்களில் வஞ்சக வலையை விரித்த பி.ஜே.பி. – தந்தை பெரியார் மண்ணில் அது எடுபடாது!

வஞ்சக டில்லி ஆளுந்தரப்பு, அரசியல் அடிமைகள் கட்சிகளை அடமானப் பொருளாக்கி, அவர்களும் தங்களை விற்றுக் கொண்ட நிலையில், எப்படியாவது – வடநாட்டில் அரியானா, மகாராட்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் செய்த அரசியல் வித்தைகளைத் தமிழ்நாட்டிலும்  கையாள நினைத்து, ஏமாந்ததுதான் மிச்சம் என்று உணரும் நிலையின் முதற்கட்டத்திற்கு வந்து  ‘முகாரி’ பாடும் கையறு நிலையில் உள்ளனர்!

பலப்பல ‘மாயமான்’கள், அலங்கரிக்கப்பட்ட பொய்க்கால் குதிரைகள், வாடகை ஜட்கா குதிரைகள் – தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற ரேஸ் குதிரையை முந்த முயன்றால், படுதோல்வியில்தான் முடியும் என்று காட்டவேண்டும் அல்லவா! தன்மான பூமியாம் பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டின் தலையாய கடமையல்லவா அது?

எனவேதான், தேர்தல் நேரத்தில் ‘‘மின்மினிகளை’’, மின்சாரத்திற்கு இணை என்று ஏமாந்துவிடக் கூடாது என்பதையும், நமது அரும்பெரும் தலை வர்கள் காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்கள் பெற்றுத்தந்த ‘‘சமூகநீதிக் கனியை’’ பறிக்க நினைக்கும் டில்லி ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியை – வாக்களிப்பின்மூலம் தூள் தூளாக்கி, அவர்தம் ஆசையை நிராசையாக ஆக்கி, மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, மீண்டும் மலரப்போவது ‘திராவிட மாடல் ஆட்சியே’ என்று உலகுக்குப் பறைசாற்றக் களப் பணியாற்றுவது நமது கடமையில், முதன்மையான அவசர அவசியம் அல்லவா!

கொளுத்தும் வெயிலிலும்
நமது பிரச்சாரப் பயணம்!

‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம்’’ கொளுத்தும் கோடையாக இருந்தாலும், டில்லியின் தணியாத கொடும் வெப்பத்தை முறியடிக்க, நாம் அனைவரும் மக்களிடையே பரப்புரைமூலம் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டி, நாமும் நமது எளிய பிரச்சாரத்தை நாளை (6.4.2026) நெல்லைச் சீமையிலிருந்து முதலில் தொடங்குகின்றோம்.

எனவே, வயதையும், கொடும் கோடையின்  கொடுமை கண்டு நம்மை தயக்கத்துடன் கடமையாற்ற அனுமதிக்கும் கழகக் கொள்கை உறவுகளே, திராவிட புதுவரவுகளே, இராணுவ வீரர்களுக்கு மழை, வெயில், புயல், வெள்ளம் இவற்றைப் பார்க்கும் பழக்கம் உண்டா? கிடையாது.

ஒரு ஸ்டாலினுக்காக அல்ல –
நாட்டு நலனுக்காக!

இது, ஏதோ ஒரு ஸ்டாலின் என்ற தனி மனிதருக்காக அல்ல; அவர் அமைத்துள்ள கூட்டணி வெற்றி என்பது நமது தமிழ்நாட்டின் மானம் காக்க, உரிமைகளை வென்றெடுக்க, நம் பெருமைகளை இன மற்றும் அரசியல் எதிரிகள் பறிக்கத் திட்டமிடுவதைத் தவிடுபொடியாக்கிட, வருங்காலச் சந்ததியினர் வாழ்வை ஒளிமயமாக்கி, உரிமைகளைக் காத்திட, உன்னத ஆட்சியாம் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மூலமாகவே முடியும் என்ற உண்மையை ஊரெங்கும், பாரெங்கும் பரப்பிட இப்பயணம் பயன்படட்டும்!

பயணங்கள் முடிவதில்லை –

லட்சியங்கள் தோற்பதில்லை!

வாகை சூடுவோம் – புதிய வரலாறு படைப்போம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

5.4.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *