சென்னை, ஏப். 5 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனக்கு ஒதுக்கப்பட்ட இரண்டாவது தொகுதியை பா.ஜ.க-விற்கே விட்டுக் கொடுத்து அதிரடி காட்டியுள்ளார் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம். தங்களுக்குச் சவாலான தொகுதி ஒதுக்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ள அவர், இந்தத் தேர்தலில் தனது கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின்படி, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தரப்பிலிருந்து தலா ஒரு தொகுதி என மொத்தம் இரண்டு இடங்கள் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக இருந்தது. இதில் அ.தி.மு.க தரப்பில் ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில், இயக்குநர் நடிகருமான சுந்தர் சி. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என ஏற்ெகனவே அறிவிக்கப்பட்டு, பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில், பா.ஜ.க தரப்பிலிருந்து ஒதுக்கப்பட வேண்டிய இரண்டாவது தொகுதி குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பா.ஜ.க வெளியிட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் புதிய நீதி கட்சிக்கு இடமளிக்கப்படவில்லை. இது குறித்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ஏ.சி. சண்முகம், பா.ஜ.க தங்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்க முன்வந்த போதிலும், அது மிகவும் சவாலான மற்றும் கடினமான தொகுதியாக இருந்ததால் அதைத் தாம் ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

“பிரதமர் மோடி வருகையால் கெடுபிடி… புதுச்சேரி மக்கள் கடும் அவதி”
நாராயணசாமி சாடல்
புதுச்சேரி, ஏப்.5 பிரதமர் மோடி புதுச்சேரி வருகைக் காக காவல்துறையினர் காட்டும் கெடுபிடியால் புதுச்சேரி மக்கள் அவதியடைந்ததாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வந்தபோது (4.4.2026) அஜந்தா சிக்னல் தொடங்கி காமராஜர் சிலை வரை ரோடு ஷோ செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு, காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால், இப்பகுதியிலுள்ள காமராஜர் சாலை, 45 அடி சாலை தொடங்கி பல சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் சிறிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலாப் பயணிகள் வரை மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட காணொலிப் பதிவில், ”பிரதமர் வருகைக்கு 2 நாள் முன்பாகவே மிகப் பெரிய கெடுபிடியை காவல்துறை செய்தது. அஜந்தா சிக்னல் தொடங்கி காமராஜர் சிலை வரை உள்ள கடைகள் மூடப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. மருத்துவமனைக்கும், கடைகளுக்கும் மக்கள் செல்ல முடியவில்லை. மக்கள் அலைக்கழிக்கப்பட்டு திருப்பி அனுப்படுகிறார்கள். வேலை செல்ல சிரமம். பொதுமக்கள் இயல்பு நிலை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் 4.4.2026 மாலை 4 மணிக்கு வருகிறார் என்பதற்காக 3.4.2026 முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் செல்ல வேண்டிய மக்கள் திருப்பிவிடப்பட்டதால் சிரமம் அடைந்தனர். பாதுகாப்பு என்கின்ற பேரில் காவல் துறை செயல்பாடு மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையூறு செய்யப்போவதில்லை. காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் மக்களை பெரிய அளவில் பாதிக்க செய்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் தேர்தல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்கள் தான் பொறுப்பு. பிரதமர் வருகையால் பொது மக்களை துன்புறுத்துவது ஏற்புடையதல்ல. இடையூறு இல்லாமல் பிரச்சாரம் நடத்தலாம்.
காவல்துறை மாவட்ட நிர்வாகம் கெடுபிடி கண்டிக்கத்தக்கது. தனி நபருக்காக மக்கள் அவதிப்பட அவசியமில்லை. பிரதமர் வரும் இரண்டு மணி நேரம் முன்பு மூடினால் ஏற்கலாம். ஆனால் 24 மணி நேரமாக மூடப்பட்டது தவறானது” என்று நாராயணசாமி கூறினார்.

