திருவண்ணாமலை, ஏப். 1- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்களில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாரதிய ஜனதா கட்சியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
தேர்தல் என்பது
மோடி vs ஸ்டாலின்!
திருவண்ணாமலையில் பிரச்சாரத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “வரவிருக்கும் தேர்தல் என்பது மோடிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான தேர்தல்.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகத் தொடர வேண்டும். தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கும் பாஜக, எடப்பாடி பழனிசாமியைத் தங்களுக்கு அடிமையாக்கி வைத்துள்ளது” என்று சாடினார்.
“ஜாடிக்கு ஏற்ற மூடி”
– எடப்பாடி மீது விமர்சனம்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியின் முரட்டு அடிமையாகச் செயல்பட்டு வருகிறார். ஜாடிக்கு ஏற்ற மூடி போல, மோடியின் சொல்படி நடக்கும் அடிமையாகவே எடப்பாடி உள்ளார். எத்தனை ‘டீம்’கள் தமிழ்நாட்டுக்கு வந்தாலும், மக்கள் செல்வாக்கு பெற்ற சாம்பியன் திமுக தான்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, “தமிழ்நாடு எப்போதுமே டில்லிக்கு ‘அவுட் ஆஃப் கண்ட்ரோல்’ (அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது) தான். மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஆட்சியே இங்கு நடக்கிறது” என்று ஆவேசமாக முழங்கினார்.
துணை முதலமைச்சரின் இந்தப் பிரச்சாரக் கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
