சென்னை, மார்ச் 29– எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு, மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் வாழ்த்து பெறுவதற்காக வந்தோம். எங்கள் கடமையை செய்து முடித்துள்ளோம். நாங்கள் அறிவித்திருக்கும் வேட்பாளர்கள் மட்டுமல்ல, எங்களின் கூட்டணி வேட்பாளர்களும் மாபெரும் வெற்றி பெறும் வகையில் எங்களது பணிகள் அமையும். இதற்காக அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் உறுதியெடுத்துக் கொண்டோம்.
தமிழ்நாடு Vs டில்லி என்பதில் எந்த சந்தேகம் இல்லை. எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும். நாளை (30.3.2026) மாலை தமிழ்நாடு மக்களுக்கான (தேர்தல் அறிக்கை) செய்தியை வெளியிடுவோம், இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நாளை: 143 வேட்பாளர்கள் களம்!
சென்னை. மார்ச் 29- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் (பார் கவுன்சில்) புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (மார்ச் 30) நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 143 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர்களாக:
தற்போதைய தலைவர் பி.எஸ்.அமல்ராஜ். உறுப்பினர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், ஜி.மோகன கிருஷ்ணன், டி.செல்வம், எம்.வேல்முருகன், பிரிசில்லா பாண்டியன். திமுக எம்பி இரா.கிரிராஜன். புதிய வரவுகளாக வழக்குரைஞர்கள் டி.பிரசன்னா, என்.விஜயராஜ், செ.ரூபன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் 27.3.2026 அன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. தேர்தல் அதிகாரி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, மூத்த வழக்குரைஞர் இ.ஓம்பிரகாஷ் ஆகியோர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
தமிழ்நாட்டில் 166 மற்றும் புதுச்சேரியில் 2 என மொத்தம் 168 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தவிர்க்கவும், வேகமான சரிபார்ப்புக் காகவும் முதன்முறையாக க்யூஆர் கோடு முறையில் வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்படவுள்ளன. வழக்குரைஞர்கள் அனைவரும் தங்களது அடையாள அட்டையுடன் வந்து வாக்களிக்குமாறு தேர்தல் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
