தேர்தல் களம் சூடு பிடிக்கிறது
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்க ஆதரவைத் திரட்ட தி.மு.க. தீவிரம்!
சென்னை, மார்ச்.27 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 5 இடங்கள் வீதம், மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தொழிற்சங்கத்தினரை நோக்கி தி.மு.க.
தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, களப்பணிகளைத் தி.மு.க.வினர் முடுக்கிவிட்டுள்ளனர். குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகளின் பலமாக விளங்கும் தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆதரவைப் பெறுவதில் தி.மு.க. தனி கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பேரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நலத்திட்டங்கள் மீதான நம்பிக்கை
தி.மு.க. அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங் களுக்குப் பொதுமக்களிடையே கிடைத்துள்ள பெரும் வரவேற்பை வாக்குகளாக மாற்ற தி.மு.க. திட்டமிட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கீழ் இயங்கும் தொழிற்சங்கத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு கோருவதன் மூலம், தேர்தல் பணிகளில் தொய்வில்லாமல் செயல்பட முடியும் என அக்கட்சித் தலைமை கருதுகிறது. தொழிற்சங்க நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் மற்றும் ஆதரவு திரட்டும் கூட்டங்கள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஒருங்கிணைந்த களப்பணி, தேர்தல் முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மகத்தான மனிதநேயம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுப்பெண்ணின் உடல் உறுப்புகள் கொடை
வேலூர், மார்ச் 27 – விபத்தில் மூளைச்சாவு அடைந்த வேலூர் புதுப் பெண்ணின் உடல் உறுப்புகள் கொடை செய்யப்பட்டது.
புதுப்பெண்
வேலூர் கருகம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3-ஆவது மகள் நர்மதா (வயது 24). இவருக்கும் சென்னையை சேர்ந்த திருவேங்கடம் (28) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது திருவேங்கடம் சென்னையில்உள்ள அய்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த புதுமண தம்பதி கடந்த 21-ஆம் தேதி சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில் நர்மதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டன. திருவேங்கடத்துக்கும் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய நர்மதா சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அரசு மரியாதையுடன்…
அங்கு சிகிச்சையில் இருந்த நர்மதா மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து குடும்பத்தினர் நர்மதாவின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க முன்வந்தனர். தொடர்ந்து அவரின் இதயம், சிறுநீரகம், நுரையீரல்,கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டது.
இதுகுறித்து நர்மதாவின் தாயார் மகேஸ்வரி கூறுகையில், ‘மண்ணோடு உடல் போவதை விட, மற்ற சிலருக்கு வாழ்வு கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், முழு சம்மதத்துடன் அவள் கண்களைத் தவிர மற்ற அனைத்து உடல் உறுப்பு களையும் கொடையாக வழங்கியுள்ளோம்’ என்றார்.
