திருச்சூர், மார்ச் 27 ‘கொஞ்சம் செல்வாக்கு மட்டும் இருந்தால் போதும்… எப்போது வேண்டுமானாலும், எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டம் பிடிக்கும் வசதி அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது…’ என, கிண்டல் அடிக்கின்றனர், கேரள மக்கள்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; இங்கு, ஏப்., 9 இல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருச்சூர் மாவட்டம், நாட்டிகா தொகுதியில் வெற்றி பெற்றவர், சி.சி.முகுந்தன். ஆனால், தற்போது இவர் அடிக்கும், ‘பல்டி’களைப் பார்த்து, அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். சமீபத்தில், நாட்டிகா தொகுதியில் மீண்டும் போட்டியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேலிடத்திடம், ‘சீட்’ கேட்டு விண்ணப்பித்தார், சி.சி.முகுந்தன்; ஆனால், கட்சி மேலிடம் கைவிரித்து விட்டது.
அடுத்த நாளே, காங்கிரஸ் மேலிடத்தைத் தொடர்பு கொண்டு பேசிய முகுந்தன், ‘உங்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறேன். எனக்கு நாட்டிகா தொகுதியில் வாய்ப்பு தாருங்கள்…’ என்றார். உள்ளூர் காங்., பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் மேலிடமும் அவரை கைவிட்டது.
சற்றும் மனம் தளராத முகுந்தன், பா.ஜ.,வை அணுகினார்; அங்கு அவருக்கு உடனடியாக, ‘சீட்’ கொடுத்து விட்டனர். இதைப் பார்த்த சக அரசியல்வாதிகள், ‘அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியையே, முகுந்தன் மிஞ்சி விட்டாரே…’ என, கிண்டல் அடிக்கின்றனர்..
