தோற்றம், உருவம் குறித்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி வென்றவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், ஆர்த்தி டோக்ரா. இந்த உத்தரகாண்ட் பெண், மூன்றரை அடி உயரம் உள்ளவர். ஆனால் இவர் வாழ்வில் எட்டிய ‘உயரம்’ பெரிது. அய்.ஏ.எஸ். அதிகாரி ஆகி சாதித்தவர் ஆர்த்தி. அவரைப் பற்றிய சுருக்கமான தகவல்கள்…
1979இல் பிறந்தவர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர். முதுகலை பொருளாதாரம் முடித்தவர். ஆர்த்தி தனது முன்மாதிரியாக கருதுவது, டேராடூனின் முதல் பெண் அய்.ஏ.எஸ். அதிகாரியான மனிஷா பன்வாரை, அவரைப் பற்றி அறிந்தபோதுதான், தானும் ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று ஆவல் கொண்டார் ஆர்த்தி.
முதல் முயற்சியிலேயே… 2006ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே நாட்டில் 56ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்தார் ஆர்த்தி. பலம்: ஆர்த்தியின் பலம் அவருடைய பெற்றோர். ராணுவ கர்னலான இவரது தந்தை ராஜேந்திர டோக்ராவும்,பள்ளி முதல்வரான தாய் கும்கும் டோக்ராவும் மகளை மனஉறுதி மிக்கவராக வளர்த்தனர். இவரை சிறப்புப் பள்ளியில் சேர்க்கும்படி மருத்துவர்களே வற்புறுத்தியபோதிலும், பொதுப் பள்ளியிலேயே சேர்த்தனர்.
ராஜஸ்தானில் ராஜ்ஜியம்: ராஜஸ்தான் ‘கேடர்’ அதிகாரியான ஆர்த்தி, அங்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்பு களை வகித்துள்ளார். புதுமையான பல முன்னோடித் திட்டங்கள் மூலம் அரசில் நற்பெயரையும், மக்களிடம் மதிப்பையும் பெற்றுள்ளார். குறிப்பாக, பொது இடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்துவதைத் தடுக்க இவர் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் பெரிய வெற்றி பெற்றது. இது பற்றி வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் ராஜஸ்தான் வந்து அறிந்து சென்றனர்.
தற்போதைய பணி: ராஜஸ்தான் மாநில தகவல் தொடர்பு தொழில்துட்பத் துறை செயலாளர்.
பாணி: இந்த உருவத்துடன் இவரால் சிறப்பாக செயல்பட முடியுமா என்று சந்தேகம் எழுப்புபவர் களுக்கு, கேள்வி கேட்பவர்களுக்கு தனது பணியால் பதிலடி கொடுப்பது ஆர்த்தியின் பாணி.
பிடித்த பொழுதுபோக்கு: ஆர்த்தி, அரிதாக கிடைக்கும் ஓய்வு நேரத்தில், இயற்கைக் காட்சிகளை கேமராவால் பதிவு செய்வதை மிகவும் ரசிக்கிறார்.
விருதுகள்: தனது அர்ப்பணிப்பு மிக்க பணியால், குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, மாநில அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை ஆர்த்தி பெற்றிருக்கிறார்.
