நீதிக்கட்சிக் காலம் முதல் நீண்டு வரும் திராவிட இயக்கத் தன்மானத் தமிழ்ச் சங்கிலி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பிற இதழிலிருந்து...

தமிழ்நாடு அரசின் சார்பில் வெளிவரும் ‘தமிழரசு’ பத்திரிகை, ஆளுமைகளின் பார்வையில் – ‘‘மக்கள் பணியில் மகத்தான 5 ஆண்டுகள்’’ என்ற தலைப்பில் கடந்த அய்ந்தாண்டுகளில் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளைத் தொகுத்து மலர் வெளியிட்டுள்ளது.

இந்த மலரில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளைப் பற்றி சிந்தனைத் திறனுடன் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் அந்தந்தத் துறைகளின் அமைச்சர்களும் தங்களின் துறைகளின் அய்ந்தாண்டு சாதனைகள் குறித்து எழுதியுள்ளார்கள். இக்கட்டுரைகளை எடுத்து வெளியிடுவதில் ‘முரசொலி’ பெருமை கொள்கிறது.

அதனடிப்படையி்ல் புலவர் முத்து.வாவாசி, “நீதிக்கட்சிக் காலம் முதல் நீண்டு வரும் திராவிட இயக்கத் தன்மானத் தமிழ்ச் சங்கிலி” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை இங்கே வெளியிட்டுள்ளோம்.

ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை எழுச்சிபெறச் செய்திடும் சிந்தனைகள் நீதிக்கட்சிக்காலத்தில்தான் முதன்முதல் எழுந்தன. அவற்றைத் தொடர்ந்து, போராட்டங்களால் கடுமையான உழைப்பால் தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்களும் வளர்த்துக் காத்து வரலாற்றில் வகுப்புவாரிக் கொள்கைக்கு வலிமையான இடத்தை உருவாக்கித் தந்துள்ளனர்.

ஆதிக்க ஜாதியினரால் அடைந்து வந்த இடர்ப்பாடுகளைக் கண்டு மனம் நொந்து வெந்துபோன பிட்டி.தியாகராயர், டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார் ஆகிய மும்மூர்த்திகளும் அவர்தம் ஆதிக்கத்தை எதிர்த்து வீர முழக்கம் எழுப்பினர். அவர்களின் கூட்டுறவில் தோன்றிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் 20.11.1916 அன்று சென்னை விக்டோரியா மகாலில் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய மூன்று பத்திரிகைளைத் தொடங்கி மக்களிடையே விழிப்புணர்வை வளர்த்தது.

ஆங்கில ஜஸ்டிஸ் பத்திரிகை அந்நாளில் உரு வாக்கிய எழுச்சி காரணமாக தென்னிந்திய நல வுரிமைச் சங்கம் எனும் பெயரே ஜஸ்டிஸ் என்பதன் தமிழ்வடிவமாக நீதிக்கட்சி என மக்களிடையே நிலைபெற்றது.

சென்னை மாகாண சட்ட சபைக்கு 1920 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று தேர்தல் நடந்து முடிந்து, நீதிக்கட்சி வெற்றிபெற்றது. அதன் தொடர்ச்சியாக 17.12.1920 அன்று கடலூர் அகரம் சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். உடல் நலிவு காரணமாக அவர் பதவி விலகவே 11.07.1921 அன்று பனகல் அரசர் சென்னை மாகாண முதலமைச்சர் ஆனார். அவர் ஆட்சிக் காலத்தில் இருளில் வாழ்ந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை 16.09.1921 அன்று பிறப்பிக்கப்பட்டது. எனினும் ஆதிக்க ஜாதியினர் அந்த வகுப்புவாரி ஆணையை அந்நாள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல்; அதனை நடைமுறைக்கு வரவிடாமலேயே தடுத்துவிட்டனர்.

அதன்பின்னர், 04.12.1926 அன்று அமைந்த சுப்பராயன் அமைச்சரவையில் எஸ்.முத்தையா முதலியார் என்ற தமிழர் 16.03.1928 அன்று கல்வி- சுங்கவரித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவரது சாதுரியமான முயற்சிகளால் வகுப்புவாரி ஆணை மீண்டும் பிறப்பிக்கப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்தது. அதன்பின்னர் தான், நலிந்து கிடந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் எழுந்து நடைபயின்று விரைந்து முன்னேறத் தலைப்பட்டனர்.

நீதிக்கட்சியின் நீட்சியாக தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், பேரறிஞர் அண்ணா அவர்களின் திராவிட முன்னேற்றக் கழகம், முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேராளுமை ஆகியவற்றுடன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் திராவிட நாயகரின் ஓய்வறியா உழைப்பாற்றல்களால் திராவிட நாயகர் ஆட்சியில் தமிழ்நாடு அனைத்துத் தடங்களிலும் பதித்துவரும் முன்னேற்ற முத்திரைகள் இந்தியா முழுவதிலும் இன்று புதிய எழுச்சிகளை ஏற்படுத்தி வருகின்றன.

வகுப்புவாரி இடஒதுக்கீடு 69 விழுக்காடாயிற்று

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசியல் சட்டப்படி நீதிக்கட்சி உருவாக்கிய வகுப்புவாரி இடஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என, செண்பகம் துரைராஜன் எனும் மாணவி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றமும்அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. அத்தீர்ப்பினை எதிர்த்து தந்தை பெரியார்; பேரறிஞர் அண்ணா ஆகியோர் நடத்திய கடுமையான போராட்டங்களின் பயனாக அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர், பிரதமர் நேரு அவர்களை வலியுறுத்திட அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டு, தொடர்ந்து நடை முறைக்கு வந்து நலிந்தோருக்கு மீண்டும் பயன்தரத் தொடங்கியது.

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் அந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை மேலும் வலுப்பெற்றது. 1969 இல் அமைக்கப்பெற்ற சட்டநாதன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி, 1971 இல் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 25 விழுக்காடு என்பது 31 விழுக்காடு எனவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்க்கான இடஒதுக்கீடு 16 என்பது 18 எனவும் உயர்த்தப்பட்டது.

அடுத்து வந்த எம்.ஜி.ஆர். ஆட்சி 1980இல் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற ரூ9,000 வருமான வரம்பை நிர்ணயித்திட, அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பால், அதை ரத்து செய்துவிட்டு, திடீரென பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 50 விழுக்காடு என உயர்த்தி எல்லோர்க்கும் இன்ப அதிர்ச்சி தந்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989 இல் ஆட்சிப்பொறுப்பேற்றபின், சில பிரிவினரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப் பட்டோரில் நலிந்தோர் எனக் கூறப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனும் புதிய பிரிவை ஏற்படுத்தி அவர்களுக்கு 20 விழுக்காடு என்றும், ஏனைய பிற்படுத்தப் பட்டோர்க்கு 30 விழுக்காடு என்றும் இடஒதுக்கீட்டைப் பகுத்து வழங்கி புதிய வரலாற்றை உருவாக்கினார்.

அதன்பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்க்கான 18 விழுக்காடு ஒதுக்கீடு முழுவதும் ஆதிதிராவிடர்க்கே எனவும், மலைவாழ் பழங்குடியினர்க்குப் புதியதாகத் தனியே ஒரு விழுக்காடு எனவும் 1990 இல் ஆணையிட்டு தமிழ்நாடு முழுவதும் வாழும் அனைத்துப் பிரிவு மக்களையும் உட்படுத்தி 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை நிலைப்படுத்தினார்.

இதிலும்,பிற்படுத்தப்பட்டோர்க்கான 30 விழுக்காட்டில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்க்கு 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கினார். அதேபோல, ஆதிதிராவிடர்க்கான 18 விழுக்காட்டில் அருந்ததியினர்க்கு 3 விழுக்காடு என உள் ஒதுக்கீடு வழங்கினார்.

நீதிக்கட்சி அரசு உருவாக்கி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் வளர்ந்த இந்த இடஒதுக்கீடுகளால்தான் தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்டு நலிந்துகிடந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதா யங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி வாய்ப்புகளையும், வேலைவாய்ப்புகளையும் பெற்று சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைகளை அடைந்தனர். இதனால்தான், தமிழ்நாடு சமூக நீதியில் இந்தியாவில் முதல் மாநிலமாக விளங்குகிறது.

திராவிட நாயகரின் சமூக நீதிச் சாதனைகள்

2021 இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நிலை நிறுத்திவருகிறார்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் காலத்தில் ஒன்றிய அரசின் பிரதமராகத் திகழ்ந்த சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள்07.08.1990 அன்று ஒன்றிய அரசின்கீழ் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வி வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று ஆணை பிறப்பித்தார். அதனால் அவர் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் 27 விழுக்காடு இடஒதுக்கீடுகள் முழுவதுமாக, முறையாகக் கடைப்பிடிக்கப்படாதவாறு தடுத்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி எதிர்த்து நின்றனர். அந்த வழக்குகளைச் சந்தித்து, மாண்புமிகு திராவிட நாயகர் 27 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என உத்தரவு பெற்றுத் தந்தார். இந்தியா முழுவதும் அந்த உத்தரவால் பயன்பெறச் செய்தார்.

மாநிலங்கள் ஒன்றிய தொகுப்பிற்குத் தரும் மருத்துவக் கல்விஇடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு வழங்கிட உச்ச நீதிமன்றத்தில் ஆணைபெற்றுத்தந்து, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியமாநிலங்கள் அனைத்திற்கும் உரிமை கிடைக்கச் செய்தவர் நமது சமூக நீதிக் கான சரித்திர நாயகர் அவர்கள்.

அதேபோல, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு மருத்துவமனை களில் பணிபுரிந்து வரும் மருத்துவர் களுக்குப் பட்ட மேற்படிப்புகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுவது நீட் தேர்வினால் தடைபட்டது. அதுகுறித்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்து, அந்த வழக்கிலும் 07.01.2022 அன்று வெற்றியை நிலைநாட்டி தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதும் பயன்பெறச் செய்தார்கள்.

இந்தச் சிறப்பான ஆணைகளை உச்ச நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தன. மூத்த பத்திரிகையாளர், ‘இந்தியா டுடே’ ஹிந்தி இதழின் நிர்வாக ஆசிரியராகத் திகழ்ந்த சமூக நீதிச் சிந்தனையாளர் திலீப் மண்டல் அவர்கள் “Thanks MKStalin. He is the Foremost Champion of Social Justice in India. Congratulations to all the OBCs. 27% OBC Reservations in NEET All india quota is now a reality அதாவது, “இந்திய சமூக நீதிக்கான முன்னணிப் போராளியாகத் திகழும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. அனைத்து இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் வாழ்த்துகள். நீட் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்க்கான 27% இட ஒதுக்கீடு தற்போது அனைவருக்கும் கிடைப்பது உறுதியாகியுள்ளது” எனக் கூறி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சமூக நீதி வெற்றிகளைப் பாராட்டினார்.

முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் மேற்கொண்டு வரும் உறுதியான சமூக நீதி நடவடிக்கைகளின் பயனாக தமிழ்நாட்டு மக்களின் அனைத்துப் பிரிவினரும் இன்று கல்வி, வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்புகள் பெற்று முன்னேறி வருகின்றனர். இதனால் சமூக நீதியிலும், சமத்து வத்திலும் தமிழ்நாடு இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டிடத்தக்க ஒரு சிறப்பான நிலையை அடைந்துள்ளது.

மகளிர் முன்னேற்றத்தில்

மக்கள் தொகையில் ஏறத்தாழ சரிபாதியாக உள்ள மகளிர் சமுதாயம், ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியால் கல்வியின்றி வேலைவாய்ப்பின்றி அடிமை நிலையிலேயே ஒடுக்கப்பட்டுக் கிடந்தனர். இந்த நிலையை மாற்றிட நீதிக்கட்சி அரசுதான் 1921 இல் பெண்கள் முன்னேற்றத்தின் முதல்படியாக தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெண்களுக்கு வழங்கும் சட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதல் ஏற்படுத்தித் தந்தது.

தந்தை பெரியார் தொடர்ந்து எழுப்பிய பெண்ணுரிமைக் கோட்பாட்டைப் பின்பற்றி முத்தமிழறிஞர் கலைஞர் 1975இல் கைம்பெண் மறுமணத்திட்டம், 1989இல் கல்வி, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு; 1996 இல் உள்ளாட்சிப் பொறுப்புகளில் 33 விழுக்காடு என இடஒதுக்கீடுகள் தந்தார். 1989 இல் பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கும் சட்டம் நிறைவேற்றினார்; காவல்துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினார்.

திராவிட நாயகர் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய சமூக நீதிப் புரட்சியின் நீட்சியாகப் பெண்கள் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை உருவாக்கியுள்ளார். பெண்களுக்கு விடியல் பயணத் திட்டம் தந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல்களை நடத்தி இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெண்களுக்கு 50 விழுக்காடு இடங்களை வழங்கி 21 மேயர்களில் 11 பேர் பெண்கள் எனும் புதிய வரலாற்றை ஏற்படுத்தினார்.

இல்லத்தரசிகளின் சுயமரியாதையைக்காத்திட 1 கோடியே 30 இலட்சத்து 69 ஆயிரத்து 831 இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியிலும் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி வாசனை காணாத ஏழைக் குடும்பங்களின் மகளிர் பலர் உயர்கல்வி பெற்று உயரும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி 08.03.2025 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் எழுச்சி விழாவில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட மகளிர் பயனாளிகளுக்கு 250 இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் வழங்கும் புதுமையான திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்களை இரத்து செய்தார்.

பெண்கள் புத்தொழில்கள் தொடங்கிட மானியம் முதலான சலுகைகள் வழங்கி ஆண்-–பெண் சமத்துவத்தை நிலைநாட்டுவதில் இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறார்.

தமிழ் வளர்ச்சியில்

பேரறிஞர் அண்ணா அவர்கள் உலகத் தமிழ்ப் பேரறிஞர்களைச் சென்னைக்கு அழைத்து, இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடத்தினார். தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினார். தமிழ், ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்படும். ஹிந்திக்கு இங்கே இடமில்லை என இருமொழித்திட்டத்தை உருவாக்கி, தமிழ்நாட்டு இளைஞர்களும், மகளிரும் வெளிநாடுகளுக் கெல்லாம் சென்று வேலைவாய்ப்புகளைப் பெற்று, பொருளாதார வளம் பெருக்கும் உன்னதமான பணிகளை நிறைவேற்றி, தமிழ்ச் சமுதாயத்திற்கு இன உணர்ச்சியை ஊட்டினார். முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்குச் செம்மொழி எனும் சிறப்பைத் தேடித் தந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தினார். சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை முதலிய திட்டங்களை நிறைவேற்றி தமிழர் நெஞ்சில் பெருமித உணர்வுகளை ஊட்டி வளர்த்தார்.

திராவிட நாயகர் அவர்கள் இருமொழித் திட்டத்தை உயிராகக் காத்து வருகிறார். அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழைப்பாலத்தை ரூ.37 கோடி செலவில் நிறுவி எதிர்ப்புகளுக்குத் தலைவணங்காமல் தமிழ் இனமான உணர்வுகளைப் போற்றி வருகிறார். பிற மொழி நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்களைப் பிற மொழிகளிலும் திராவிட மாடல் அரசு மூலம் தயாரித்து வெளியிட்டு தமிழ்வளர்ச்சியில் தனிமுத்திரைகளைப் பதித்துவருகிறார்.

தொழில் வளர்ச்சியில்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிப்காட் நிறுவனங்களை அமைத்துத் தமிழ்நாடு முழுவதிலும் தொழில் வளங்களைப் பெருக்கினார். தகவல் தொழில்நுட்பத் தொழில்களை வளர்த்துத் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் எனும் பெருமையை 1999 இல் நிலைநாட்டினார்.

திராவிட நாயகர் அவர்கள் ஆட்சிப் பொறுப் பேற்று, 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருக்கிட சென்னை, கோவை, தூத்துக்குடி, திருச்சி, கிருஷ்ணகிரி முதலிய தமிழ்நாட்டு மாநகரங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபு நாடுகள், ஸ்பெயின், அமெரிக்கா, இலண்டன், கனடா முதலிய வெளிநாடுகளிலும் தொழில் முதலீட்டு மாநாடுகளை நடத்தி 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து; 11,40,731 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து; 21,72,577 இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளும்: 12,35,945 இளைஞர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் வகையில் மொத்தம் 34,08,522 இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உறுதிசெய்து தமிழ்நாட்டுத் தொழில் வளர்ச்சியின் கம்பீரத் தோற்றத்தை நிர்மாணித்துள்ளார்.

இப்படி,நீதிக்கட்சிக் காலம் தொட்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சமூக நீதிப் புரட்சிகள் தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியிலும் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருவதால் திராவிட இயக்கத் தன்மானத் தமிழ்ச் சங்கிலி தொடர்ந்து நீட்சி கண்டுவருவதை எல்லோரும் கண்கூடாகக் காணமுடிகிறது.

திராவிட நாயகர் அவர்கள், ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறை கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று ஜனநாயக முறையில் சட்டங்களை நிறைவேற்றி சமூகநீதி, சமத்துவம் காத்துவருவதால், அரசின் துறைகள் அனைத்திலும் தமிழ்நாடு ஏனைய மாநிலங்களுக்கு எல்லாம் திசைகாட்டி, இந்தியாவின் கலங்கரை விளக்கமாய்ப் புகழொளி வீசுகிறது என்பது வெள்ளிடை மலையாகும்!

நன்றி: “முரசொலி”, 23.3.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *