சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. மற்றும் படைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் டில்லியில் உள்ள ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) அலுவலகத்தில் நேற்று (20.3.2026) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே அனுப்பி யிருந்த மூத்த அய்.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சந்தீப்ராய் ரத்தோட்
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, யு.பி.எஸ்.சி தரப்பில் மூன்று அதிகாரிகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ராஜிவ் குமார் (டி.ஜி.பி., ஆவின்) சந்தீப்ராய் ரத்தோட் (இயக்குநர், காவலர் உயர் பயிற்சியகம்) மகேஷ்குமார் அகர்வால் (தற்போது ஒன்றிய அரசுப் பணியில் உள்ளவர்).
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு: இந்த மூன்று பெயர்களுக்கும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது பொறுப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றி வரும் வெங்கடராமன் அவர்களையே நிரந்தர டி.ஜி.பி-யாக நியமிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யு.பி.எஸ்.சி பரிந்துரைத்துள்ள மூன்று அதிகாரிகளில், சந்தீப்ராய் ரத்தோட் தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
