சென்னை, மார்ச் 19- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
அதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது இல்லத்திலிருந்தே அஞ்சல் வாக்கு (Postal Ballot) மூலம் வாக்களிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தே வாக்களிக்கும் இந்த வசதியைப் பெற பின்வரும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். 40 சதவீதத்திற்கும் மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகள். தமிழ்நாட்டில் தற்போது 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4 லட்சம் பேரும், 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2,530 பேரும், மாற்றுத்திறனாளிகள் 4.63 லட்சம் பேரும் என மொத்தம் 8.65 லட்சம் பேர் இந்தத் அஞ்சல் வாக்கு வசதியைப் பெறத் தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 5 நாட்களுக்குள், அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு 12டி (Form 12D) படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தகுதியுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று இந்தப் படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்று வருகின்றனர்.
அலுவலர்கள் முதன்முறை செல்லும்போது வீட்டில் இல்லாதவர்களின் இல்லங்களுக்கு மீண்டும் ஒருமுறை செல்வார்கள். இரண்டு முறையும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில், அவர் அஞ்சல் வாக்களிக்க விருப்பமற்றவராகக் கருதப்படுவார் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு, தேர்தல் அலுவலர்கள் உரியப் பாதுகாப்புடன் வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அங்கு ஒரு தற்காலிக வாக்குச்சாவடி அமைப்பை ஏற்படுத்தி, ரகசியம் காக்கப்படும் வகையில் அவர்கள் வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்வார்கள். இந்த நடைமுறை மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஜனநாயகக் கடமையாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
