ஒரு சமூகத்தின் உண்மையான முன்னேற்றம், அதில் பெண்கள் எந்தளவிற்கு பொது வாழ்க்கையில் பங்கேற்கிறார்கள் என்பதில்தான் தெரியும்.தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சுகங்கள், குடும்பச் சவுகரியங்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்து மக்கள் நலனுக்காக உழைக்கும் பெண்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து, உடலால் மறைந்தாலும், அவர் சிந்தனை யால், அவர் செயல்பாட்டால் நம்முள் அன்பான அன்னையாக வாழ்ந்து கொண்டிருப்பவரை தான் ‘அம்மா’ என்கிறார் தந்தைபெரியார்.
“அன்னை” “அம்மா “என்ற சொல்கொண்டு யாரை எல்லாம் அழைப்பார்கள். தன்னை பெற்றத்தாயை அப்படி அழைப்பார்கள்.
நாமும் அப்படி அழைக்கக் காரணம்
“அன்னை” என்பது உடல் தாய் மட்டுமல்ல, மதிப்பு–அன்பு –கடமை என்று தன்னை சார்ந்து வாழாமல் நமக்காக வாழ்ந்தவருக்கு அந்த மரியாதையை நாம் கொடுக்கின்றோம்.
அவ்வகையில், தந்தை பெரியார் அவர்கள் அன்னையாரை பற்றி கூறும் போது ‘‘இந்த வயதிலும் நான் சாகாமல் இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் இந்த அம்மா தான் என்பது யாருக்கும் தெரியாது. என் உடம்புக்கு ஏற்ற உணவைப் பக்குவப்படுத்தி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மா தான். இவர் தான் என் அம்மா’’ என்பார்.
தந்தை பெரியாருக்கு இவர் தாரமாக அல்ல
தாயாக வாழ்ந்தவர்
இச்சமூகம் மானமும், சுயமரியாதை பெற வேண்டும் என்பதற்காக,பெற்ற பிள்ளைகள் மீது அக்கறை கொள்வது போல், தந்தையாக தன்னுடைய மானத்தையும், சுயமரியாதையும் இழந்து, தன் உடல் நலனைப்பற்றி அக்கறை கொள்ளாமல் நேரம் காலம் பார்க்காமல் உழைத்த அந்த மாமனிதனை பராமரித்து, அவர் ஆயுளை நீட்டித்து, கண்ணை இமை காப்பது போல காத்து, நமக்காக உழைக்க அவரை தயார்படுத்திக் காத்தவரைத் தான் அவர் ‘அம்மா’ என்று அழைக்கிறார்.நாம் ‘அன்னை’ என்று அழைக்கிறோம்.
தந்தை பெரியார் அவர்கள் அன்னையாரை பற்றி கூறும் போது ‘‘இந்த வயதிலும் நான் சாகாமல் இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் இந்த அம்மா தான் என்பது யாருக்கும் தெரியாது. என் உடம்புக்கு ஏற்ற உணவை பக்குவப்படுத்திக் கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மா தான். இவர் தான் என் அம்மா’’ என்பார்.
நம் கழகத் தலைவர் ஆசிரியருக்கும் தாய் தான் அவர். அதனை அவரே “தாயற்ற சேய்களுக்கு தாயாக விளங்கினார் அம்மையார், அதில் நானும் ஒருவன்” என்று உணர்ச்சி மிகுந்து குறிப்பிடுவார் ஆசிரியர் அவர்கள். பெற்ற தாயை மிகச் சிறிய வயதில் இழந்தவர் ஆசிரியர். அவரைப் போன்று தாய் அன்புக்கு ஏங்கியவர்களுக்கு தாய் என காட்சியளித்தவர் அம்மையார்.
சிறைவாசம், போராட்டங்கள், அரசியல் நெருக்குதல்–இதற்கு நடுவில் கூட “தங்களுக்கென்று ஒரு தனிவாழ்க்கை இல்லாமல்” வாழ்ந்தவர் தந்தை பெரியார்.
அதே போல் இயக்கம்–மக்கள் நலனில் முழுமையாக காணப்படும் பொதுத்தொண்டு தான் வாழ்க்கை என்று வாழ்ந்தவர் அன்னை மணியம்மையார்.
பெண்கள் பெரும்பாலும் மகிழ்ச்சி என்பது இது தான் என்று நினைத்துக் கொண்டு, தன் முகத்தை பாராமரிக்க சில ஆயிரம், தன் கூந்தலை பராமரிக்க சில ஆயிரம்… ஏன், புருவத்தையும் நகத்தை கூட பராமரிக்க சில ஆயிரம் என்று செலவு செய்யும் பெண்கள் மத்தியில், காது, மூக்கு, கழுத்து, நெற்றி என்று எதிலும் நகைகள் அணியாமல், விலை உயர்ந்த பட்டாடைகள் அணியாமலும், தன் இளமைப் பருவத்திலும், தன் வாழ்நாள் முழுவதும் கருப்பு சேலை, வெள்ளை ரவிக்கை அணிந்து மிக மிக எளிமையாக வாழ்ந்த தியாகத் தாய் தான் இவர்.
அன்னையார் “மகிழ்ச்சி” என்று
எதை குறிப்பிடுகிறார் தெரியுமா?
” தந்தை பெரியார் அவர்களின் தொண்டுக்கு முழுக்க முழுக்க என்னை ஆளாக்கி,அவர் நலத்தை கண் எனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனதில் நிறுத்தி குழந்தைக்கு ஊறு நேரா வண்ணம் பாதுகாப்பதிலே மகிழ்ச்சி கண்டேன்’’ என்கிறார்.
‘ஆடை, ஆபரணங்களில் கிடைப்பது தற்கால மகிழ்ச்சி, நிரந்தரமான மகிழ்ச்சி தனக்கு பிடித்த எவ்வொரு காரியத்திலும் அதில் தன்னை முழுமையாக கரைத்துக் கொள்வது, அதில் மூழ்கிப் போவது அதுவே மகிழ்ச்சி’ என்று உணர்த்துகிறார் அன்னை மணியம்மையார்.
எங்கெங்கோ சென்று, எதில் எதிலோ மகிழ்ச்சியை தேடுகிறார்கள். ஆனால் இவரோ மகிழ்ச்சி என்னவென்பதை அவர் வாழ்ந்த வாழ்க்கையின் மூலம் நமக்கு உணர்த்துகிறார். இதுவே உண்மையான ஆன்மிகம் என்று அவர் வாழ்ந்த வாழ்க்கை மூலம் நமக்கு உணர வைக்கிறார்.
எப்போதும் எதிலும் ‘தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண் டும்’ ஆசையும், கர்வமும் கொள்ளாதவர். ‘தன் முகம் முக்கியமல்ல, தன் செயல் தான் முக்கியம்’ என்று விளம் பரம் விரும்பா தலைவராக, தந்தை பெரியார் என்ற மெழுகுவத்திக்குத் திரியாக இருந்து ‘திராவிடம்’ என்ற மானுட சமத்துவ தத்துவத்தை காக்க, தன்னை எரித்துக் கொண்டு இச் சமூகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியவர் தான் நம் அம்மா.
“காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒரு பால் ஒட்டிய குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனி ருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அது பெரியாரின் பெருந் தொண்டுக்கு அருமருந்து. இப்படி பெரியாருக்கு அரு மருந்தாக அய்யா வாழ தன் துடிக்கும் இளமையைப் ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை “அன்னை” என்று புகழாமல் நாம் வேறு என்னவென்று புகழவல்லோம்? ” என்று புகழுரைக்கிறார் புரட்சிக் கவிஞர் அவர்கள்.
அன்னை மறைவின் போது கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் கவிதை வரிகள் இவை.
அம்மா மறையவில்லை – அய்யா
இலட்சியம் சாகவில்லை
அம்புவிமீதினிலே அவர்
பாதையை நாம் தொடர்வோம்
அம்மா என்ற சொல்லினிலே – அன்பின்
ஆறுபாயுதடா
அம்மா என்ற சொல்லினிலே – அய்யா
உருவம் தெரியுதடா
தியாகத் திரு உருவம் – தந்தை
ஆயுளின் இரகசியம்
தீயில் மெழுகாம் – இந்தத்
தாயின் கதையடா!
போராட்ட குணமடா- நெஞ்சம்
புலி வாழும் குகையடா
ஈரோட்டு எரிமலையில் – பூத்த
எழுச்சியின் சின்னமடா!
அம்மா மறையவில்லை” என்கிறார்.
ஆம் அம்மா மறையவில்லை நம்முள் என்றும் வாழந்து கொண்டிருக்கிறார்.
அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
மேலும்,இன்றைய மாணவச் செல்வங்கள் குறிப்பாக பெண்கள் அவரைப்பற்றி அறிந்து கொள்ள திராவிட மாடல் 2.0 அரசு அன்னை மணியம் மையார் வாழ்க்கை வரலாற்றை பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக கொண்டு வந்தால், எது வாழ்க்கை, எப்படி வாழ்வது, எதில் மகிழ்ச்சியாக இருப்பது என்பதை குறித்த தெளிவு பிறக்கும். அவர்களுக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கை உருவாக வழிவகுக்கும். திராவிடம், திராவிட தத்துவம் இச் சமூகத்திற்கு ஏன் தேவை என்பது குறித்த புரிதல் உருவாக வழிவகுக்கும்.
அன்னை பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் போற்றும் இத்தருணத்தில் இதை நிறைவேற்றினால் திராவிட மாடல் அரசின் நாயகர், சமூகநீதி காவலர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு மேலும் ஒரு மணிமகுடமாக இவை அமையும்.
