சென்னை, மார்ச் 3– ஈரான் ஆதரவு போராட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு முடக்க முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பன்னாட்டு சட்டங்கள் மற்றும் அய்க்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு, எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது போர் தொடுத்துள்ளன.
இது ஈரானின் இறையாண்மைக்கு எதிரானது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறார். அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளின் அனுமதி இன்றியே, ஈரான் மீதான போரை டிரம்ப் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், ஒன்றிய அரசு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டிப்பதற்கு தயங்குகிறது. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களை தாக்கி வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்தெல்லாம் கவலைப்படாத ஒன்றிய அரசு, அமெரிக்க – இஸ்ரேல் அட்டூழியத்தைக் கண்டிக்க துணிவு இல்லாமல், தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இந்தியாவில் நடைபெறும் ஈரானுக்கு ஆதரவானபோராட்டங்களை கண்காணிக்குமாறும், போராடும் அமைப்புகள் மற்றும் குரல் கொடுக்கும் தனி நபர்களை கண்காணிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை முடக்கும் நோக்கம் கொண்டது.
எனவே, இந்திய மக்கள் போருக்கு எதிரான இயல்பான மனநிலையுடன் ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்க – இஸ்ரேலிய அரசுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தை முடக்க நினைப்பது எதேச்சதிகார நடவடிக்கையாகும். இந்த ஜனநாயக விரோதப் போக்கை உடனடியாக மோடி அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில்
மாணவர் சேர்க்கை தொடக்கம்!
சென்னை, மார்ச் 3- தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் உட்படப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, முன்கூட்டியே மாணவர் சேர்க்கை மார்ச் மாதமே தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டிற்கான (2026-2027) மாணவர் சேர்க்கையும் நேற்று (2.3.2026) முதல் தொடங்கப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கையைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்து, புதிதாகச் சேர்ந்த குழந்தைகளுக்கான நலத்திட்டப் பொருட்களை வழங்கினார்.
இதுதவிர அங்கன்வாடி மய்யங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும், நடப்பாண்டில் 5 லட்சம் பேரைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
