பூமியின் ஆழத்தில் உருகிய நிலையில் பல உலோகங்கள் உள்ளன. அந்த உலோகக் குழம்புகளின் சுழற்சியால்தான் பூமிக்கு காந்தப் புலம் உருவாகிறது. காலப்போக்கில் மாறக்கூடிய இந்த காந்தப்புலத்தின் தடயங்கள், பழங்காலத் தாதுக்களுக்குள் இன்னும் பாதுகாப்பாக உள்ளன.
இந்த ஆதிகால காந்தப்புல தடயங்களை ஆய்வு செய்த போது, பூமியை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு மாற்றங்களோடு அவை ஒத்துப் போவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால், நம் காலடியில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் ஆழத்தில் நிகழும் மாற்றங்கள், மேற்பரப்பில் உள்ள ஆக்சிஜன் அளவைத் தீர்மானிக்கக்கூடும் என்ற புதிய பார்வையை ‘சயன்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியான ஒரு ஆய்வு முன்வைக்கிறது. புவியின் ஆழ் மய்ய இயக்கத்திற்கும், பூமி மேல் சிக்கலான உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான காற்றுக்கும் இடையே ஒரு நுட்பமான பிணைப்பு இருப்பதை இது உணர்த்துகிறது.
இது ஒரு நேரடித் தொடர்பு என்று இன்னும் முழுமையாக நிரூபிக்கப் படவில்லை.
இருப்பினும், பூமி எவ்வாறு உயிர்வாழத் தகுந்த இடமாக மாறியது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு புதிய கோணத்தை இந்த ஆய்வு திறந்துவிட்டுள்ளது. பூமியின் ஆழமான செயல்பாடுகளும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாக இருக்கலாம் என இந்த ஆய்வுத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
