செங்கல்பட்டு, பிப். 19– பத்மசிறீ விருது பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 2 பாம்பு பிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பள்ளியில் வேலைக்கான ஆணையை ஆட்சியர் சினேகா நேற்று (18.2.2026) வழங்கினார்.
அரசு வேலை
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சென்னேரி கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல், மாசி ஆகியோர் பத்மசிறீ விருது பெற்றனர். இவர்கள் விலங்குகள் நல பிரிவில் பத்மசிறீ விருதைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பயணித்து கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்து சாதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வடிவேல் மகன் சுரேஷ், மாசி மகன் தங்கராசு ஆகியோருக்கு அவர்களின் கல்வி தகுதி அடிப்படையில் வண்டலூர் அருகேயுள்ள குமிழி அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தோட்டப் பராமரிப்பாளர் மற்றும் இரவு காவலர் பணி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளியில் பணி புரிவதற்கான நியமன ஆணையை ஆட்சியர் சினேகா நேற்று (18.2.2026) வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர், அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இப்படிக் கூட நடக்குமா?
ஜே.இ.இ. தேர்வில்
ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்!

புவனேஷ்வர், பிப். 19– ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்கள் மஹ்ரூப் அகமது கான் மற்றும் மஸ்ரூர் அகமது கான். இரட்டையர்களான இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அய்.அய்.டி போன்ற உயர்கல்வி நிலையங்களில் சேர உதவும் ஜே.இ.இ (JEE) தேர்வை இருவரும் எழுதியிருந்தனர்.
இந்த ஜே.இ.இ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மஹ்ரூப் மற்றும் மஸ்ரூர் ஆகிய இருவரும் 300-க்கு 285 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாகியுள்ளனர். வாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த இவர்கள், தற்போது ஜே.இ.இ தேர்விலும் ஒரே மதிப்பெண்ணைப் பெற்று உயர்கல்வி நிலையத்தில் சேரவுள்ளனர்.
