நாகர்கோவில், பிப். 19- விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கபடி வீரரின் உடல் உறுப்புகள் கொடை செய்யப்பட்டன. இதன் மூலம் 5 பேருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது.
கபடி வீரர்
நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (23). கபடி வீரரான இவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் குமரி மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கடந்த 16ஆம் தேதி காவல்கிணறு மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மகேஷ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் துயரமான சூழலிலும், மகேஷின் உடல் உறுப்புகளைத் கொடையாக அளிக்க அவரது மனைவியும் குடும்பத்தினரும் முன்வந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “எங்கள் மகன் மறைந்தாலும், அவரது உறுப்புகள் மூலம் இன்னும் சிலர் உயிர் வாழ்வார்கள் என்ற நல்லெண்ணத்தில் இந்த முடிவை எடுத்தோம்” எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (18.2.2026) காலை மருத்துவர் குழுவினர் மகேஷின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகிய உறுப்புகளை அகற்றினர். பின்னர் அகற்றப்பட்ட உறுப்புகளை விரைவாகக் கொண்டு செல்ல ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, காவல் துறையினர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதனால் ஆம்புலன்சுகள் சில நிமிடங்களிலேயே நகரைத் தடையின்றி கடந்தன.
ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் – திருச்சி மருத்துவமனை மற்றொரு சிறுநீரகம் – காரைக்குடி மருத்துவமனை கண்கள் – நாகர்கோவில் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன. உறுப்புகள் கொடை செய்யப்பட்ட பிறகு, மகேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு விளையாட்டு வீரராகத் திகழ்ந்த இளைஞர், மறைவுக்குப் பின்னும் 5 பேருக்கு வாழ்வளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை மற்றும் நீண்ட கால விசா
நிரந்தரத் தீர்வு கோரி கடிதம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு
முகாம் வாழ் ஈழத் தமிழர்கள் நன்றி!

சென்னை, பிப்.19- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (18.2.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் குழு, நேரில் சந்தித்து, கடந்த அய்ந்து ஆண்டுகளாக முகாம் வாழ் தமிழர்களுக்காக செயல்படுத்திவரும் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களுக்கும், வாழ்வுரிமைக்கான நிரந்தர சட்டப்பூர்வமான தீர்வை பெற இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியதற்காகவும், தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளுக்காகவும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை, நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 15.2.2026 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கே நேரில் வந்து பார்வையிட்டு, தங்களின் குறைகளைக் கேட்டறிந்து அதனை நிறைவேற்றிவருவதற்கும், பல்லாண்டுகளாக “அகதிகள் முகாம்’ என்று அழைக்கப்பட்ட தங்களது வாழ்விடங்களை, “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றம் செய்ததற்கும், இந்த அய்ந்து ஆண்டுகளில் 5,920 புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருவதோடு மட்டுமல்லாமல், தற்சார்பு மற்றும் எதிர்கால நம்பிக்கைக்கு தொழிற் கூடங்கள் அமைத்து தந்ததற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.
முகாம் வாழ் தமிழர்களின் நன்றியை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலன், கண்ணியம் மற்றும் சட்ட உரிமைகளை உறுதி செய்வதில் இவ்வரசு எப்போதும் உறுதியாக இருக்கும் என்று அவர்களிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் மா.வள்ளலார், பொதுத்துறை அரசு கூடுதல் செயலாளர் கி.பாலசுப்ரமணியம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
