
மருத்துவர்
சு.நரேந்திரன்
சிறப்புநிலைப் பேராசிரியர், தமிழ்நாடு
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
மருத்துவமனை அவசர மருத்துவப் பயனாளிகள் பிரிவில் அன்று ஒரே கூட்டம்; பரபரப்பு; வாந்தி பேதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 30 மாணவர்கள் அங்கு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு பள்ளியைச் சேர்ந்த விடுதி மாணவர்கள் ஆவர். இதற்குக் காரணம் என்ன? சரியாக ஈயம் பூசாத பாத்திரத்தில் சமைத்த உணவை அவர்கள் உள்கொண்டதுதான். இவ்வாறு பல பேர் உண்ட ஒரே வகையான உணவு, ஒரே சமயத்தில், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நோய்க்குறிகளை உணவுப்பாதையில் உண்டு பண்ணினால் அதை ‘நச்சுணவு’ என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை ‘Food Poisoning’ என்பர். உண்மையில் நஞ்சு உணவில் கலந்துவிடுவதில்லை. மாறாக உணவே நஞ்சாகி விடுகின்றது. நச்சுணவு பற்றிய செய்திகளை அன்றாடம் நாம் பத்திரிகைகளில் பார்க்கிறோம். இந்நச்சுணவுப் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, இந்நோய்க்கான காரணங்களையும், அறிகுறிகளையும், தடுப்பு முறைகளையும் நாம் அறிந்திருப்பது அவசியமாகும்.
நோய்க்கான காரணங்கள்
களிம்பு ஏறிய பித்தளை அல்லது துருபிடித்த பாத்திரங்களில் சமைத்த உணவு வகைகளை உள்கொள்ளுதல், தொற்று நோய் உள்ள, அழுகிப்போன, சரியாக வேக வைக்காத மீன், ஆடு, மாடுகள் போன்றவற்றின் இறைச்சியைப் பயன்படுத்துதல், பல்லி, எலி, போன்றவை விழுந்த உணவுப் பொருள்களை, எலி, பெருச்சாளி போன்றவற்றின் கழிவுப் பொருள்கள் கலந்த உணவை உண்ணுதல்; நச்சு வகை சேர்ந்த நாய்க்குடை, மீன் போன்றவற்றை உண்ணுதல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த காய்கறிகளைக் கழுவாது சமைத்துண்ணுதல் காய்கறிகளை அவற்றுடன் சேர்த்து வளர்ந்துள்ள கேடு தரும் காளான்களுடன் பயன்படுத்துதல், டின்களில் அடைக்சுப்பட்டுள்ள புளித்த பழாசங்களைப் பருகுதல் நாள்பட்ட பால், பால் கலந்த தின்பண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் போன்றவை நச்சுணவு உடலில் தோன்றக் காரணங்களாகின்றன.
ஏனெனில் இவற்றிலுள்ள நோய் பரப்பும் கிருமிகளான ஸ்டெப்டோகாக்கஸ் சானமொனெல்லா (Stepto coccus Salmonella, ஸ்டெபெய்லோ காக்கஸ் (Steplylo Coccus) ஆகியற்றாலேயே இந்நோய் அதிகமாக உண்டாகிறது. பெரும்பாலும் கோடைக்காலத்தில் தெப்பம், திருவிழா போன்ற மக்கள் பெருந்திரளாகக் கூடுகின்ற இடங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை வாங்கி, உண்பதனாலேயே நச்சுணவு நோய் உண்டாகிறது. இந்நோய், சளி, தொண்டைப்புண், உடம்பிலுள்ள சீழ்பிடித்த கொப்புளங்கள் போன்றவற்றிலிருந்து சமைக்கும்பொழுதோ பரிமாறும்பொழுதோ நோய்க்கிருமிகள் வெளியேறி உணவுடன் கலந்து உணவை நச்சுணவாக மாற்றி விடுவதுமுண்டு.
பொதுவிடங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களை அவை நச்சுணவா என்று நுகர்ந்து பார்த்தோ அல்லது நிற மாறுபாட்டைக் கண்டோ அறிந்துகொள்வது அவ்வளவு எளிதன்று. அடைத்து விற்கப்படும் டின்களில் உள்ள உணவு கெட்டு, வீட்டில் முடிகள் உப்பிக் கொண்டிருக்கும். இவ்வுணவை உண்பவர்களுக்கு பொட்டிலிசம் (Botulism) எனும் நச்சுணவு நோய் வரும். இந்நோய் கண்பார்வையை இரட்டிப்பாக்கி நாம்புத் தளர்ச்கியை உண்டுபன்னும். இந்நோய்வாய்ப்பட்டோர் பிழைப்பது அரிது. இனி, நாய்க்குடையால் உண்டாகும் நச்சுணவை பற்றிப் பார்ப்போம்.

நாய்க்குடை
உலகில் அதிக விருப்பமாக உண்ணப்படும் உணவு வகைகளில் ஒன்று நாய்க்குடை. நம் நாட்டின் கிராமத்து மக்கள் இதை விரும்பி உண்கின்றனர். இதன் சிலவகை நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த நச்சுத் தன்மையை எவ்வாறு அறிவது? நஞ்சுள்ள நாய்க்குடையைப் பச்சையாகத் தின்றால் உப்பு கரிக்கும். அதன் நிறம் நீலம் அல்லது பச்சையுடன் கூடிய பழுப்பு நிறமாக இருக்கும். இதனை உண்டவர்க்கு நோயின் அறிகுறிகள் தென்படும். அவை, தலைவலி, வயிற்று எரிச்சல், வாந்தி, பேதி முதலியன. மேலும், நோய்வாய்ப்பட்டவரின் உடல் நீலம் பூத்துப் பின்னர் மஞ்சள் நிறமாக மாறும். மூச்சு விடுவதில் சிரமம், தசைப்பிடிப்பு, துடிப்பு, புத்தித் தடுமாற்றம் போன்றவையும் ஏற்படக்கூடும்.
உணவை நச்சுணவாக மாற்றும் மற்றொரு பொருள் கேசரிப்பருப்பு. இப்பருப்பைக் கலப்படப் பொருளாகப் பயன்படுத்துவது இன்று சாதாரணமாகிவிட்டது. பஞ்ச காலங்களில் இது அதிகமாக விளையும். இப்பருப்பின் நச்சுத் தன்மையை அறிந்தும் கூட ஏழைகள் இதனை உணவாகப் பயன் படுத்துகின்றனர். உண்ணும் உணவில் 30 விழுக் காட்டிற்கு அதிகமாக இப்பருப்பு அமையுமாயின், உணவு நச்சுணவாக மாறி, தசைகளை வலுவிழக்கச் செய்து, கை, கால்களைச் செயலிழக்கச் செய்துவிடுகிறது.
பொதுவாக நச்சுணவை உள்கொள்பவர்களுக்கு உண்ட 1 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் நோயின் அறிகுறிகளான தலைவலி, மயக்கம், வாந்தி, பேதி, வயிற்றுவலி, தாகம், கைகால் ஜில்லிப்பு, வியர்வை, சுரம், நடுக்கம், தசையிழப்பு, தளர்ச்சி போன்றவை ஏற்படும்.
மனித உடலுக்கு இத்தகைய தீமைகளை விளைவிக்கும் நச்சுணவை உண்டவர்க்குத் தாம் செய்ய வேண்டிய முதலுதவி யாது எனின், அவரைக் கூடிய விரைவில் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். கடந்த 24 மணி நேரத்திற்குள் அவர் உண்ட பொருள்களைப் பற்றி நன்கு யோசித்து, சந்தேகத்திற்கிடமான உணவு எது என்பதை முடிவு செய்து, அதை மருத்துவரிடம் கூற வேண்டும். அவ்வுணவின் மிச்சம் இருந்தால், அதை எடுத்துச் சென்று மருத்துவரிடம் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அவர் தக்க பரிசோதனைகள் செய்து, உணவின் நச்சுத் தன்மையை உறுதிப்படுத்தி, அதனை வாங்கிய அல்லது உண்ட இடத்தைப் பற்றிச் சுகாதார அதிகாரிக்குத் தெரியப்படுத்தி, மற்றவர்களுக்கு இந்நச்சுணவு நோய் பரவாமல் உடனே தடுக்க முடியும்.
தடுப்பு முறைகள்
இனி, இந்தச்சுணவு நோயினின்றும் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு? என்பதை நோக்குவோம். உணவைச் சுத்தமான பாத்திரங்களில் தயாரித்து மூடி வைத்திருக்க வேண்டும். பழைய சோற்றைக் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் பயன்படுத்தக் கூடாது. செம்பு, பித்தளைப் பாத்திரங்களில் சமைத்த உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்கக் கூடாது. அழுகிய அல்லது சரியாக வேக வைக்காத மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணக்கூடாது. தொற்று நோய் உள்ள ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சியை உண்ணக் கூடாது. எலி, பெருச்சாளி, கரப்பான் போன்றவற்றின் கழிவுப் பொருள்கள் உணவுடன் கலந்து விடாதவாறு உணவுப் பொருள்களைப் பாதுகாக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் உணவுப் பொருள்களைச் சேர்த்து வைக்கக் கூடாது. மேலும் அம்மருந்துகளைப் போட்டுப் பயிர் செய்த காய்கறிகளை நன்கு கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். டின்களில் அடைத்து விற்கப்படும் மீன், இறைச்சி போன்றவற்றை நன்கு வேகவைத்த பிறகே உண்ண வேண்டும். உணவு தயாரிக்கும் இடங்களிலும், பரிமாறும் இடங்களிலும் சளி, இருமல், தொண்டைப் புண்ணில் சளி, உடலில் சீழ் கொப்பளங்கள் போன்றவை உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது. நாய்க் குடையை உணவாகப் பயன்படுத்துவதற்கு முன்னர் அதன் நச்சுத் தன்மையை அறிதல் அவசியம். கேசரிப்பருப்பை நன்றாகத் தீட்டி வேக வைத்தே பயன்படுத்த வேண்டும்.
மேற்கூறிய தடுப்பு முறைகளைக் கையாண்டு வந்தால், கொடுமை வாய்ந்த நச்சுணவுப் பாதிப்பிலிருந்து ஓரளவு நம்மைத் தற்காத்து நல்வாழ்வு வாழலாம் என்பது திண்ணம்.
