சென்னை, பிப்.5 ஒன்றிய அரசின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு மிகக்குறைந்த நிதியை ஒதுக்கிவிட்டு, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பெரும் தொகையை வாரி வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே நிதி ஒதுக்கீடு
ரயில்வே நிதி ஒதுக்கீடு விவரம் இந்த நிதியாண்டில் இந்திய ரயில்வே துறைக்கென மொத்தம் ரூ. 2,04,697 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ள இந்த நிதியில், ஆளும் பாஜக தரப்பு மிகுந்த பாரபட்சத்துடன் செயல்பட்டிருப்பது தரவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
ரயில்வே திட்டங்களுக்காக அதிக பட்ச நிதி ஒதுக்கீட்டை வட மாநிலங்களே பெற்றுள்ளன. மகாராட்டிரா: ரூ. 23,926 கோடி உத்தரப்பிரதேசம்: ரூ. 20,012 கோடி குஜராத்: ரூ. 17,366 கோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கும் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு மிகச் சொற்பமான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு: ரூ. 7,611 கோடி கேரளா: ரூ. 3,795 கோடி முக்கியக் குறிப்பு: மகாராட்டிராவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்கு கூட தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓரவஞ்சனை
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள், புதிய வழித்தடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்குத் தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேர்தலை மய்யப்படுத்தியும், அரசியல் லாபத்திற்காகவும் மட்டுமே பாஜக ஆளும் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிதிப் பகிர்வு, “ஒன்றிய அரசு இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பார்க்கிறதா?” என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
