அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழினை 2.5.1925 அன்று முதல் தொடங்கி நடத்தினார்.
குடிஅரசின் இணை ஆசிரியராக கடவுள் நம்பிக்கையாளரும், காங்கிரசு வாதியுமான வழக்குரைஞர் திரு.வா.மு.தங்கபெருமாள் பிள்ளை அவர்களை இணை ஆசிரியராகக் கொண்டு தந்தை பெரியார் நடத்தினார்.
இக்குடிஅரசு செய்தித்தாள் அலுவலகத்தை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்து சொற்பொழிவாற்றினார். தனது உரையில், “பல பததிரிக்கையிலிருந்தும் இப்பத்திரிகை போன்ற கருத்தையுடைய பத்திரிகை வேறொன்றுமில்லை. அதனுடைய பெயரே அதற்குச் சான்றாகும்” என்று குறிப்பிட்டார்.
திருவையாற்றில் ‘வடமொழிக் கல்லூரி‘ என்று இயங்கி வந்ததை திருவையாறு அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றப்படவும், தமிழ் பாட மொழியாக கற்பிக்கப்படவும் செய்திட்ட பெருமைக்குரியவர் தான் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். வடமொழி செப்பேட்டில் வடமொழிக்கானதே இக்கல்லூரி என்று பார்ப்பனர்கள் கூறிவந்ததை அவருக்கு சமஸ்கிருதம் தெரிந்ததால் நிரூபித்து பார்ப்பனர்கள் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய அறிஞராவார்!
இப்பெரும் புகழுக்குரிய ஞானியாரடிகளின் நினைவு நாள் இன்று (2.2.1942).
