சென்னை, ஜன. 20- ‘திறந்த நிலை பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பி.பார்ம்., டி.பார்ம்., பார்ம்.டி. ஆகிய படிப்புகளில் சேரலாம்’ என, இந்திய மருந்தியல் கவுன்சில் அறிவித்துள்ளது.
தற்போது வழக்கமான மாநிலம் மற்றும் ஒன்றிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டுமே, பி.பார்ம்., உள்ளிட்ட மருந்தியல் படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் எல்லா மாநில அரசுகளுக்கும், மாநில மருந்தியல் கவுன்சில்களுக்கும், இந்திய மருந்தியல் கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், ‘விதிகளின் படி திறந்த நிலை பள்ளி மாணவர்களையும் பி.பார்ம்., டி.பார்ம்., பார்ம்.டி. உள்ளிட்ட இளநிலை மற்றும் பட்டய மருந்தியல் படிப்பில் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு
7 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு
மேட்டூர், ஜன. 20- மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசனப்பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நேற்று (19.1.2026) இரவு 10 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கனஅடிக்கு கீழ் குறைந்து உள்ளது. குறிப்பாக வினாடிக்கு 65 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. அதேநேரத்தில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது. 19.1.2026 அன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 96.91 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
