‘‘தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா… வேண்டாமா?’’ என்று மக்களைப் பார்த்து அமித் ஷா கேட்டிருக்கிறார்!
‘‘தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டில்லியிலிருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா?’’
இது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக் கூடிய சவால்!
திண்டுக்கல், ஜன. 8– “தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா… வேண்டாமா?” என்று மக்களைப் பார்த்து அமித் ஷா அவர்கள் கேட்டிருக்கிறார். அய்யா, இதையேதான் நாங்களும் சொல்கிறோம்! 2026 தேர்தல் என்பது, “தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டில்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா? என்று முடிவு செய்வ தற்கான தேர்தல்! இது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக் கூடிய சவால்!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆற்றிய உரை வருமாறு:–
திண்டுக்கல் – புரட்சியின் பெயர்!
திண்டுக்கல் – புரட்சியின் பெயர்! எழுச்சியின் பெயர்! வீரத்தின் பெயர்! வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போராடிய வேலு நாச்சியாரும், – மருது சகோதரர்களும்,- ஊமைத்துரையும், தங்களின் அடுத்தகட்டப் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்ட ஊர்தான், இந்த வீரத்தின் விளை நிலமாக இருக்கக்கூடிய இந்த திண்டுக்கல்!
இன்றைய விழாவைப் பொறுத்தவரைக்கும், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 இலட்சத்து 62 ஆயிரத்து 864 பயனாளிகளுக்கு, ஆயிரத்து 82 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நான் இங்கே வந்திருக்கி றேன். மொத்தம், ஆயிரத்து 595 கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் விழாவாக இது அமைந்திருக்கிறது!
இங்கு கூடியிருக்கும் உங்களை பார்க்கும்போது, இது அரசு விழாவா! இல்லை ஒரு மாநாடா! என்று வியப்பாக இருக்கிறது! அந்தளவுக்கு இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய. அய்.பி அவர்களுக்கும், அமைச்சர் சக்கரபாணி அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் சரவணன், அவர்க ளுக்கும், அதேபோல, மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரசு அலு வலர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்து களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
திராவிட மாடல் கொள்கையை
வலிமைப் படுத்தும் அய்.பி.!
உங்கள் முகங்களில், மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என்றுதான், ஏராளமான திட்டங்களை நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்! நகரங்களுக்கு இணையாக கிராமங்களின் உட்கட்டமைப்பும் வளரவேண்டும். இந்த சமச்சீரான வளர்ச்சிதான் நம்முடைய திராவிட மாடலின் இலக்கணம்! அதற்கு அடிப்படையான பணிகளை செய்து திராவிட மாடல் கொள்கையை வலிமைப்படுத்தி வருகிறார் நம்முடைய அய்.பி. அவர்கள்.
நாடே பாராட்டும் சாதனைத்திட்டங்கள்!
கடந்த நான்கரை ஆண்டுகளாக, நாட்டு மக்கள் எல்லோருமே பாராட்டும் அளவிற்கு, சாதனைத் திட்டங்களை செய்துகொண்டு இருக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, 2026 புத்தாண்டு பிறந்ததும், இன்னும் அதிகமான திட்டங்களை அறிவித்திருக்கிறோம்!
நீங்கள் எல்லோரும் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்த நான் ஆணையிட்டிருக்கிறேன். அரசு ஓய்வூதியம் என்பது அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல; அவர்கள் வாழ்க்கைத் துணையின் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய சமூக பாதுகாப்பு! அதையும் நாங்கள் மறுபடியும் நாம் உறுதி செய்திருக்கிறோம். இதன் மூலமாக, நிச்சயமற்ற எதிர்காலம் என்ற நிலையிலிருந்து நம்பிக்கை அளிக்கும் எதிர்காலத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம்!
அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றம்!
இப்போது அரசு ஊழியர்கள் கொடுக்கின்ற பேட்டிகளை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். என்ன சொல்கிறார்கள், “எங்கள் ஓய்வுகால வாழ்க்கையை முதலமைச்சர் அர்த்த முள்ளதாக மாற்றியிருக்கிறார். இந்த அறிவிப்பு மூலம் ஆறரை இலட்சம் பேர் வாழ்க்கையில் முதலமைச்சர் ஒளியேற்றி வைத்திருக்கிறார்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.
மற்றொரு பக்கம், நாட்டில் சாமானிய மக்கள் ஒருவர்கூட நிம்மதியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் – இந்த திட்டத்தையெல்லாம் “செய்யவே முடியாது” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், நாம் செய்து காட்டியிருக்கிறோம்!
பொங்கல் பரிசு!
அதேபோல், அடுத்த முக்கிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் இருக்கும் 2 கோடியே 22 இலட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாட 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். அந்த ரொக்கம் மட்டுமல்ல, பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீள கரும்பு வழங்கவும் ஆணையிட்டிருக்கிறேன்.
அதுமட்டுமல்ல, பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் இதுவரையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நாளை நான் சென்னையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைக்கயிருக்கிறேன். அதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும், 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பரிசுத்தொகுப்பு, வேட்டி, சேலை என்று எல்லாம் சேர்த்து மொத்தமாக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப் போகிறோம். வருகின்ற பொங்கல், உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்காக தரக்கூடிய மகிழ்ச்சிப் பொங்கல்.
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்!
இதுமட்டுமா! இரண்டு நாட்களுக்கு முன்பு, 20 இலட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்கின்ற திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். அதன் முதற்கட்டமாக 10 இலட்சம் மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வழங்கியிருக்கிறோம். இதனால் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி, பாலிடெக்னிக், அய்.டி.அய். போன்ற அனைத்து படிப்புகள் சார்ந்த மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படுகிறது. Dell, Acer, H.P. போன்ற உலகத் தரமான கம்பெனிகளின் லேப்டாப்-அய் தான் நம்முடைய மாணவர்களின் கைகளில் நாம் வழங்கியிருக்கிறோம்! “நீங்கள் நன்றாக படியுங்கள் – மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்! உலகம் உங்கள் கையில்” என்று நான்அந்த நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறேன்.
ஆனால், கடந்த ஆட்சியில், இந்த திட்டத்தின் நிலைமை என்ன? 2019 ஆம் ஆண்டு பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டார். எப்போது 2019 ஆம் ஆண்டே நிறுத்திவிட்டார் – அதுவும் சி.ஏ.ஜி. அறிக்கை என்ன சொல்லியது தெரியுமா? “68 கோடி ரூபாய் மதிப்பில் பெறப்பட்ட 55 ஆயிரம் லேப்டாப்களை வீணடித்துவிட்டார்கள்” என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் வெட்டவெளிச்சமாக அதில் வெளியிடப்பட்டிருந்தது. இது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நீங்கள் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஆதாரமாக இருக்கிறது.
சோஷியல் மீடியாவில், இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒருவர் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். என்னவென்றால், “பொங்கல் பரிசாக அனைத்து குடும்பங்களுக்கும் 3 ஆயிரம் ரூபாய், – மகளிர் உரிமைத் தொகையாக ஒரு ஆயிரம் ரூபாய் – புதுமைபெண் திட்டத்தில் மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் – தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய், – விடியல் பயணம் மூலமாக மாதம் தோறும் 1000 ரூபாய், சேமிப்பு, – மாணவ, மாணவியருக்கு ஏறக்குறைய 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப் – அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பொங்கல் போனஸ் என தைப் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல ஆயிரம் ரூபாயும், பொங்கல் பரிசுகளும் கிடைக்கப் போகிறது என்று அதில் சொல்லியிருந்தார்கள்.
இப்படி நம்முடைய விடியல் ஆட்சியில், ஏதாவது ஒரு திட்டத்தில் எப்படியாவது எல்லோருக்கும் பயன் கிடைத்து விடுகிறது! மக்கள் நலனுக்காக நாம் செயல்படுத்தும் திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள், இல்லாத பிரச்சினைகளை எல்லாம் உருவாக்கி குளிர்காயலாமா? என்று நினைக்கிறார்கள்!
“அமித் ஷா”-வா? இல்லை,
“அவதூறு ஷா”-வா?
அண்மையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார். செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அவர் பேசியதெல்லாம் பார்த்தபோது, அவர் “அமித் ஷா”-வா? இல்லை, “அவதூறு ஷா”-வா? என்று சந்தேகம் வருகிறது! அந்தளவிற்குஉண்மைக்குப் புறம்பாக பேசிவிட்டு சென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு உரிமைகளுக்கு முடிவுகட்டும் வகையில், நம்முடைய தமிழ்நாடு செயல்படுவதாக அமித்ஷா அவர்கள் பேசிவிட்டு சென்றிருக்கிறார். இதற்காக என்னுடைய கடுமையான கண்டனத்தை உங்கள் மூலமாக, இந்த விழாவின் மூலமாக, இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை போல!
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இப்படியொரு சாதனை நடைபெற்றிருக்கிறதா?
நம்முடைய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இப்போது வரை சுமார் 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு அதாவது, அவருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறோம்! இப்படியொரு சாதனையை நீங்கள் ஆளுகின்ற பா.ஜ.க. மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது.
அதுமட்டுமல்ல, 997 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 7 ஆயிரத்து 701 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 655 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம். உண்மையான பக்தர்கள் நம்முடைய அரசைப் பாராட்டுகிறார்கள்.
அனைத்து சமயத்தவர்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து, அவர்களின் மத உரிமைகளை காப்பாற்றும் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்.
இப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் சொல்வது அவருடைய பதவிக்கு கண்ணியமல்ல. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், கலவரம் செய்யவும், பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம்தான் தமிழ்நாட்டில் ஈடேறவில்லை! அது இனியும் நடக்காது! நடக்கவும் விடமாட்டோம்! இந்த ஸ்டாலின் இருக்கின்றவரை அது நடக்கவே நடக்காது! வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், ஒரு சிலர், இங்கு இப்படி பேசி, வடமாநிலங்களில் வெறுப்பு பிரசாரம் செய்யலாமா என்பது தான் அவர்களின் எண்ணம்!
தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அவதூறு மட்டும் பரப்பிவிட்டு செல்லவில்லை. ஒரு நல்ல காரியத்தையும் செய்துவிட்டு சென்றிருக்கிறார். நாம் கேட்க வேண்டிய கேள்வியை அவரே கேட்டுவிட்டார். நம்முடைய வேலையை அவர் இன்னும் ஈசியாக்கிவிட்டார்! அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
தமிழர்களின் சுயமரியாதைக்கு
விடப்பட்ட சவால்!
“தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா… வேண்டாமா?” என்று மக்களைப் பார்த்து அமித் ஷா அவர்கள் கேட்டிருக்கிறார். அய்யா, இதையேதான் நாங்களும் சொல்கிறோம்! 2026 தேர்தல் என்பது, “தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டில்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா? என்று முடிவு செய்வதற்கான தேர்தல்! இது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக் கூடிய சவால்!”
தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை
நம்பத் தயாராக இல்லை!
“அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தால், பா.ஜ.க.தான் தமிழ்நாட்டை ஆளும்” என்று நாங்கள் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை, அமித் ஷா அவர்கள் நேரடியாகவே ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்!
‘நீட்-‘டை விடாப்பிடியாக திணிக்கும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காமல், தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும், தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமையைக் குறைக்கும், வட மாநிலங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்தும்,
பி.ஜே.பி. ஆட்சி அமையதான் எதிர்க்கட்சித் தலைவர் பழனி சாமி பாடுபடுகிறார்!
அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ‘ப்ராக்சி’ ஆட்சி நடந்தது! கடந்த 5 ஆண்டுகளாகதான் அதில் இருந்து தமிழ்நாடு மீண்டு தலைநிமிர ஆரம்பித்திருக்கிறோம். இப்போது நேரடியாகவே பா.ஜ.க. ஆட்சி என்று சொல்லிகொண்டு வருகிறார்கள்!
11 ஆண்டுகளாக ஒன்றியத்தில் நடைபெறுகின்ற என்.டி.ஏ. ஆட்சியில் தமிழ்நாட்டிற்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத உங்களை தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லை!
2019, 2021, 2024-என்று கடந்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் படுதோல்வியை பரிசாக தந்ததும் உங்களுக்கு அது புரியவில்லையா? தமிழ்நாட்டிற்கு ஓர வஞ்சனை செய்வதை நீங்கள் மாற்றிக்கொள்ளாதபோது, தமிழர்கள் மட்டும் தங்களுடைய முடிவை மட்டும் எப்படி மாற்றிக் கொள்வார்கள்?
மறுபடியும் நாங்கள் தான் வருவோம்! நல்லாட்சியைத் தொடர்வோம்!
மக்கள் எப்போதும் நம்முடைய அரசு பக்கம் தான் இருக்கிறார்கள்! மறுபடியும் நாங்கள்தான் வருவோம்! நல்லாட்சியைத் தொடர்வோம்! எதிலும் நம்பர் ஒன், அனைத்துத் துறையிலும் ஏற்றம் என்று இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு செல்வோம். திராவிட மாடல் 2.0-வில் இன்னும் பெரிய சாதனைகளைப் படைப்போம்! என்று கூறி உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
