சென்னை, டிச.29– தமிழ்நாடு முழுவதும் 21 வாரங்களாக நடைபெற்ற 844 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்களில் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
மருத்துவ முகாம்
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,256 இடங்களில் முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் நடந்து வந்த முகாம், தற்போது வியாழக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்று வருகிறது.
வழங்கப்படும் மருத்துவச் சேவைகள்: இந்த முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதயம், நுரையீரல், எலும்பியல், நரம்பியல், தோல், காது-மூக்கு-தொண்டை (ENT), மகப்பேறு, இயன்முறை மருத்துவம் (Physiotherapy), பல், கண், மனநலம் மற்றும் குழந்தைகள் நலம் ஆகிய துறைகளைச் சார்ந்த சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர். மேலும், இந்திய மருத்துவம் (ஆயுர்வேதம், யுனானி, சித்தா) சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
கூடுதல் சேவைகள்: மருத்துவப் பரிசோதனைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளும் இந்த முகாம்களில் மேற்கொள்ளப் படுகின்றன.
தற்போதைய நிலை: 21ஆவது வாரமாக நேற்று முன்தினம் 44 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 65,147 பேர் பயனடைந்தனர். இதன் மூலம், இதுவரை நடந்து முடிந்துள்ள 844 முகாம்கள் வழியாக மொத்தம் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
