சென்னை, டிச. 11- அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்பயிற்சி மய்யங்கள் அமைப்பதற்கான தகுதியுள்ள பள்ளிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கோரியுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்கக இயக்குநர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருடன் நடைபெற்ற கூட்டத்தின் அடிப்படையில், அய்டிஅய் மய்யங்களை அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகுதித் தணிக்கைகள் (Criteria) வகுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம், தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதிகள் – நிபந்தனைகள்
அய்.டி.அய் மய்யங்கள் அமைக்கத் தேர்வு செய்யப்படும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் கீழ்க்கண்ட வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்:
நிலத் தேவை: ஒவ்வொரு பள்ளியிலும் அய்.டி.அய்க்கு குறைந்தபட்சமாக 0.5 ஏக்கர் (50 சென்ட்) நிலம் இருக்க வேண்டும்.
கட்டடப் பயன்பாடு: ஏற்கெனவே கட்டப்பட்ட செய்முறை அறைகள், ஆய்வகங்கள் அல்லது பிற கட்டடங்கள் பயன்பாடின்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருந்தால், அத்தகைய பள்ளிகளை அய்.டி.அய் அமைப்பதற்குப் பயன்படுத்தலாம்.
பகுதியின் தேர்வு: தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
முன்னுரிமை: தொழில் மண்டலங்கள் / தொழில் சாலைகள் / தொழில் துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்கண்ட வசதிகள் கொண்டுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு வார காலத்திற்குள் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
