மதுரை, டிச.5 மதுரை மாநகராட்சி 75 ஆம் வார்டில் வசிக்கும் விவசாயி தங்கம் (52), தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகையை வீட்டில் ஒரு சிறிய தலையணைக்குள் பத்திரமாக வைத்திருந்தார். தனது மகளின் திருமணம் நெருங்கி வந்ததால், வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்தத் தலையணை மற்றும் சில பழைய துணிகளை கவனக்குறைவாக மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.
மறுநாள் காலை, நகையை வைத்திருந்த தலையணை குப்பைத் தொட்டியில் வீசியது நினைவுக்கு வந்ததும், தங்கம் மிகுந்த பதற்றமடைந்தார். உடனடியாக தனது வீட்டின் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் தேடிப் பார்த்தார். நகை கிடைக்காததால், 75 ஆம் வார்டு மேற்பார்வையாளர் மருதுபாண்டியனை தொடர்பு கொண்டு நடந்ததை விளக்கினார்.
மருதுபாண்டியன், உடனடியாக அந்தப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் இது குறித்து தெரிவித்தார். அப்போது, மீனாட்சி என்ற தூய்மைப் பணியாளர் குப்பைத் தொட்டியில் தேடியபோது, ஒரு தலையணை கிடப்பதைக் கண்டார். அதை பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் 25 பவுன் தங்க நகை இருப்பது தெரியவந்தது. உடனடியாக மருதுபாண்டியன், நகையின் உரிமையாளர் தங்கத்தைத் தொடர்பு கொண்டு, நகையைப் பத்திரமாக ஒப்படைத்தார். நகையை திரும்பப் பெற்ற விவசாயி தங்கம், தனது வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்திருந்த நகையை மீட்டுத் தந்த மேற்பார்வையாளர் மற்றும் தூய்மைப் பணியாளர் மீனாட்சிக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். “தனது மகளின் திருமணத்திற்க்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து சேர்த்துவைத்த 25 பவுன் நகையை மீட்டுத் தந்த மேற்பார்வையாளர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு!
இந்த தங்கமான செயலைக் கண்ட பொதுமக்கள், தூய்மைப் பணியாளர் மீனாட்சி மற்றும் மேற்பார்வையாளர் மருதுபாண்டியனின் நேர்மையை மனதாரப் பாராட்டினர். குப்பையில் கிடந்த 25 பவுன் நகையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த இவர்களின் நேர்மை, சமூகத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சிறைத்துறை வழிகாட்டு நெறிமுறைக்கு பாராட்டு:
அனைத்து சிறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
மதுரை, டிச.5 சிறைத்துறை வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, இதனை அனைத்து சிறைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த தனலட்சுமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் துரைப்பாண்டி, திருச்சி சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள அவரை ஆஜர்படுத்துமாறும், அவருக்கு தேவையான சிகிச்சை, சட்ட உதவி வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மனுதாரரின் கணவர் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். அவருடன் உள்ள மற்றொரு சிறைவாசி கதிரேசனும் சிறைச்சாலையில் உள்ள தொலைபேசியில் இருந்து ஒரே நேரத்தில் பேசியுள்ளதால், சிறைச்சாலை கையேட்டை மீறுவதாக கூறி தனிமை சிறையில் அடைத்துள்ளதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கையளித்துள்ளார். தனிமைச்சிறையில் இல்லை என்றாலும், சிறைவாசிகள் ஒருவருக்கொருவர் சுயாதீனமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இனிமேல், சிறைவாசிகளுக்கு சிறு தண்டனை வழங்கும்போது, கண்டிப்பாக எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விவரங்களை எழுத்துப்பூர்வ ஆவணமாக சிறை நிர்வாகம் வழங்க வேண்டும். இது அவருடைய பதிவேடுகளிலும் பதிவு செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை சிறைத்துறை வகுத்துள்ளது என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பாராட்டுகிறோம். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட மத்திய, கிளை சிறைகளுக்கும் சிறைத்துறை தலைவர் தரப்பில் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். அனைத்து சிறைகளிலும் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
