சென்னை, டிச.5 குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மாநிலத்தின் முக்கிய நலத்திட்டம் ஆகும்.அதே நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதற்கிடையில் விடுபட்ட பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் சிவகாசியில் நேற்று (4.12.2025) நடைபெற்ற மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. உடனடியாக வழங்க வேண்டும் என்று விடுபட்ட பெண்கள் அளித்த மனுக்கள் தான் ஏராளம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறிவிப்பு என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பேசுகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக 1.15 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் தடைகளையும் தாண்டி தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
