கொல்கத்தா, நவ.25 மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நேற்று (24.11.2025) எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
வாக்காளர் பட்டியல்
மே.வங்கத்தில் அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீதான அழுத்தம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது இந்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள 2 அவசர முடிவுகளுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கிறேன். இதை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
சிறப்புத் திருத்தப் பணி களில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் களையோ அல்லது வங்க சாஹித்ய கேந்திராவிலுள்ள (பிஎஸ்கே) ஊழியர்களையோ பயன்படுத்த வேண்டாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (டிஇஓ) மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி (சிஇஓ) உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்தப் பணிகளுக்கு ஓராண்டு காலத்துக்கு 1,000 தனியார் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களையும், 50 சாப்ட்வேர் இன்ஜினீயர்களையும் பணியில் அமர்த்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சந்தேகத்தை எழுப்புகிறது. ஏன் இந்தப் பணி களுக்காக வெளி ஆட்களைக் கொண்டு வருகிறீர்கள்?
குடியிருப்பு வளாகம்
அடுத்ததாக, தனியார் குடியிருப்பு வளாகங்களில் வாக்குச்சாவடி அமைக்கலாம் என்று தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவது ஏன்? இதுதொடர்பான பரிந்துரைகளை அனுப்புமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப் பித்திருப்பது ஏன்? இது எங்களுக்கு 2-வது ஆட்சேபம்.
தனியார் குடியிருப்பு வளாகங்களில் வாக்குச்சாவடிகளை அமைப்பது வாக்காளர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்கும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அரசு கட்டடங்களில் வாக்குச்சாவடிகள் அமைப்பதுதான் நடுநிலைத்தன்மையையும், மக்கள் அணுகும் வகையிலும் இருக்கும். மாறாக இந்த தனியார் குடியிருப்பு வளாகங்களில் வாக்குச்சாவடியை அமைப்பது சரியாக வராது. எனவே, இந்த பரிசீலனையை தேர்தல் ஆணையம் கைவிடவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
