முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சீரிய பகுத்தறிவாளரும், கழகப் புரவலரும், நமது கெழுதகைத் தோழரும் ஆன மானமிகு
மயிலை நா. கிருஷ்ணன் (வயது 91) அவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் இன்று (14.11.2025) அதிகாலை 3.00 மணிக்கு மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து சொல்லொணாத் துயரத்தையும், துன்பத்தையும் எமது கொள்கைக் குடும்பத்தவரும், குருதிக் குடும்பத்தவரும் வேதனையோடுப் பெற்றோம்.
மறைந்த நமது தோழர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்கள், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் அறக்கட்டளையின் மூத்த ஆயுள் உறுப்பினராக பல ஆண்டுகள் தொண்டறம் புரிந்து வந்தவர்.
கடந்த சில மாதங்களாகவே அவர்கள் திண்டுக்கல்லில் உடல் நலக் குறைவு ஏற்பட்டுத் தேறி வந்தார்கள்.
அவர்களை நானும், எனது வாழ்விணையர் திருமதி மோகனாவும் சென்ற மாதம் நேரில் சென்று கண்டு, நலம் விசாரித்து, குடும்பத்தினர் திருமதி பரமேஸ்வரி அவர்களிடம், மகன்கள், மகள்கள், உறவுகள் அனைவரிடமும் பேசித் திரும்பினோம்.
கொள்கையில் தீவிரப் பற்றாளர், எவரிடமும் பண்புடனும், பாசத்துடனும் பழகுபவர். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பேற்று திறம்பட நடத்திய, நாணயம் மிக்க ஒரு வழிகாட்டியாவார்.
அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் திருமதி பரமேஸ்வரி, மகன்கள் அசோக், மதிவாணன், மகள்கள் சாந்தி, ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றோம்.
மறைந்த ெகாள்கை மாவீரருக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.11.2025
குறிப்பு: மறைந்த மயிலை நா. கிருஷ்ணன் இறுதி நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், நேரில் சென்று கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்.
