ஜவ்வாது மலையில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருப்பத்தூர், நவ.3  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமியர் கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு நெறியாளர் சி.முகமது ஃபஹீம் மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்ட ஆய்வாளர் ரங்கநாதன், ஜவ்வாது மலைக்கு உட்பட்ட நெல்லிப்பட்டு கிராமத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கற்கருவிகளை கண்டெடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: நெல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், கிரீஸ்வரன் ஆகியோர் அளித்த தகவலின்படி, அங்கு ஆசிரியராகப் பணியாற்றும் கோவிந்தராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரது நிலங்களில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிய கற்கருவிகளை கண்டெடுத்துள்ளோம். இவை புதிய கற்கால மனிதர்களின் தேவைகளையும், தொழில்நுட்பத் திறன்களையும் வெளிப்படுத்துகின்றன. இங்கு கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரி நீளமான, ஒருமுனை கூர்மையான, நுட்பமாக மெருகூட்டப்பட்டதாக உள்ளது. காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்குவதற்கும், மரங்களை வெட்டி வீடுகளை உருவாக்குவதற்கும் இவை பயன்பட்டிருக்கும். இங்கு அதிக எண்ணிக்கையில் கற்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இவை அன்றாடப் பயன்பாட்டுக் கருவிகளாக மட்டுமின்றி, வர்த்தகத்தின் ஒரு பகுதியாகவும் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

கற்கோடாரிகளின் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் நுட்பமான மெருகூட்டல் ஆகியவை, ஜவ்வாது மலைப்பகுதியின் புதிய கற்கால மனிதர்களின் தேவையை மட்டுமின்றி, தரமான கைவினைத் திறன் மற்றும் சமூக கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றன.

இந்தப் பகுதி ஒரு காலத்தில் தன்னாட்சி பெற்ற, விவசாயம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த நாகரிக மய்யமாக இருந்திருக்கும். ஜவ்வாது மலையின் வரலாற்றில் இது திருப்புமுனைக் கண்டுபிடிப்பாகும். இவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, இந்தக் கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலப் பொருட்களையும், தமிழ்நாட்டின் மற்ற புதிய கற்காலக் குடியேற்றங்களுடன் கொண்டிருந்த வர்த்தக உறவுகளையும் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *