பெங்களூரு, அக்.9- கருநாடக அரசின் சமூக நலத்துறை நேற்று முன்தினம் (7.10.2025) பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கருநாடகாவில் பட்டியல் வகுப்பில் 101 பிரிவினர் உள்ளனர். இதில் எந்தப் பிரிவை சேர்ந்தவர், புத்த மதத்துக்கு மாறியிருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக எஸ்சி ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். கருநாடக பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்ட விதிகள் இதனை ஏற்கெனவே உறுதி செய்திருக்கின்றன.
கடந்த 1990இல் ஒன்றிய அரசு வெளியிட்ட அரசாணையிலும், கருநாடக அரசு 2013இல் வெளியிட்ட சுற்றறிக்கையிலும் இந்த செய்தி வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016இல் ஒன்றிய அரசு, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களிடமும் புத்த மதத்தினராக மாறிய பட்டியலினத்தவர் எஸ்சி ஜாதிச் சான்றிதழ்களைப் பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டது. எனவே கல்வி, வேலைவாய்ப்பு தேவைக்காக புத்த மதத்துக்கு மாறிய பட்டியலினத்தவருக்கு எஸ்சி சாதிச்சான்றிதழ் வழங்குவது கட்டாயமாகிறது. இந்த உத்தரவை அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள் உடனடியாக பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.