நாகர்கோவில், அக்.8- தொலைபேசி காலத்திற்கு முன்பு மக்கள் பெரும்பாலும் தங்கள் தொடர்புகளை கடித போக்குவரத்திலேயே வைத்திருந்தனர்.
கைப்பேசி வந்த பிறகு இந்த கடித போக்குவரத்து முற்றிலும் குறைந்தே போனது. இருப்பினும் அஞ்சல் அட்டை, இன்லெண்ட் லெட்டர் போன்றவை அஞ்சலக பயன்பாட்டில் இன்றளவும் உள்ளது.
அதேநேரம் மக்கள் முக்கியமாக அஞ்சல் அலுவலகத்தைப் பயன்படுத்தி வந்தது பதிவு அஞ்சல் முறைக்காக தான். முக்கிய அஞ்சல்களை இந்த முறையில் தான் அனுப்பி வந்தனர். இந்த வகை அஞ்சல்கள் பாதுகாப்பானது என்பதோடு அதற்கான ஒப்புதல் பதிவு அட்டை (அக்னாலட்ஜ்மென்ட் அட்டை) வைத்து அனுப்பும் போது அஞ்சலை பெற்றுக் கொண்டவரின் கையொப்பத்துடன் பதிவு அட்டை அஞ்சல் அனுப்பியவருக்கு திரும்ப வரும்.
எனவே பதிவு அஞ்சல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தொடர்புக்கும், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு முக்கிய ஆவ ணங்கள் அனுப்புவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. திருமண மற்றும் நிகழ்ச்சிக்கான அழைப்புகளையும் பதிவு அஞ்சலில் பலர் அனுப்பி வந்தனர். இந்த முறைக்கான கட்டணமும் குறைவு என்பதால் பலரும் இந்த பதிவு அஞ்சல் முறையில் தங்களது முக்கிய ஆவணங்கள், புகார்கள் போன்றவற்றை அனுப்பி வந்தனர். இந்த நிலையில் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் அஞ்சல் துறை விரைவு அஞ்சல் முறையை அமல்படுத்தியது. இது பதிவு அஞ்சல் முறையை போன்றது என்றாலும், இந்த முறையில் அஞ்சல் அனுப்பினால் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படு கிறது. மேலும் பொருளின் எடைக்கு தகுந்தவாறும், அனுப்பப்படும் ஊருக்குத் தகுந்தவாறும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
உள்ளூருக்குள் விரைவு அஞ்சலை அனுப்ப வேண்டும் என்றாலும் கட்டணங்கள் அதிகம் என்பதால், விரைவு அஞ்சல் முறையை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. அவர்கள் பதிவு அஞ்சல் முறையை தான் தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் பதிவு அஞ்சல் முறையை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்தது. கடந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் இருந்தே இதனை நிறுத்தும் முடிவை ஒன்றிய அரசு கையில் எடுத்தது.