புதுடில்லி அக்.6- கணவன் – மனைவி என இருவரின் பெயரிலும் அசையாச் சொத்து பதிவு செய்யப்பட்டிருந்தால், மாதத் தவணையைச் செலுத்திய காரணத்துக் காக, கணவர் மட்டுமே அந்தச் சொத்துக்குத் தனி உரிமை கோர முடியாது என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இணையர், 2005ம் ஆண்டில் கூட்டாகச் சேர்ந்து மும்பையில் ஒரு வீடு வாங்கினர். 2006இல் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுப் பிரிந்து வாழத் துவங்கினர். அதே ஆண்டில் விவாகரத்து கோரி கணவர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது, இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், இருவரும் சேர்ந்து வாங்கிய அந்த வீட்டிற்குத் தானே உரிமையாளர் எனக் கணவர் கோரியுள்ளார். இதை எதிர்த்து மனைவி சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘வீடு வாங்குவதற்கான பாதித் தொகையைச் சீதனமாகக் கொண்டு வந்த பணத்தில் இருந்து கணவரிடம் வழங்கினேன். அந்த வகையில், அந்த வீட்டின் மீது எனக்கும் பாதி பங்கு இருக்கிறது’ என மனைவி குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “கணவன் – மனைவி என இருவரும் சேர்ந்து ஒரு சொத்தை வாங்கி, அதை இருவரின் பெயரில் பதிவு செய்திருந்தால், அந்தச் சொத்தின் மீது கணவன் மட்டுமே
உரிமை கொண்டாட முடியாது.
அப்படி உரிமை கொண்டாடுவது, பினாமி சொத்துப் பரிவர்த்தனைகள் சட்டத்திற்கு எதிரானது. வாங்கிய வீட்டிற்கான மாதத் தவணையைச் செலுத்தி வந்த காரணத்தை மட்டும் சொல்லி, கணவர் மட்டுமே அந்தச் சொத்துக்கு ஏகபோகமாக உரிமை கொண்டாடவும் முடியாது” என்று தெளிவாகக் கூறப்பட்டு ள்ளது.