சென்னை, செப்.30 கரூர் சம்பவத்தை மய்யப்படுத்தி வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டன.
சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதளப் பதிவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில், “கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகின்றன. இவ்வாறு, பொது வெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார் களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
3 பேர் கைது
எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே கரூர் விவகாரம் தொடர்பாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பியதாக பா.ஜ.க. கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளர் சகாயம் (38) தவெக மாங்காடு உறுப்பினர் சிவநேசன் (36) அதே கட்சியின் ஆவடி வட்டச் செயலாளர் சரக்குமார் (32) ஆகிய 3 பேரை சென்னைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.