வைக்கம் வீரருக்கு கேரளாவில் மற்றொரு நினைவுச் சின்னம்! ஆலப்புழாவில் வைக்கம் வீரர் பெரியாருக்கு ரூ.4 கோடியில் நினைவு மண்டபம்: செப்.26 இல் அடிக்கல்

2 Min Read

சென்னை, செப்.23  கேரளாவில் தந்தை பெரியாருக்கு மேலும் ஒரு நினைவு மண்டபம் தமிழ்நாடு அரசு அமைக்கிறது. வைக்கம் வீரர் பெரியாருக்கு கேரளத்தின் ஆலப்புழா அருகே நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழா செப்.26 இல் நடைபெறுகிறது. பெரியார் சிறை வைக்கப்பட்ட ஆறுக்குட்டியில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என 2023 இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பெரியாருக்கு நினைவு மண்டபம் அமைக்க ஆறுக்குட்டியில் உள்ள 54 சென்ட் நிலத்தை வரிச்சலுகையுடன் கேரள அரசு வழங்கியுள்ளது.

முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று ஆறுக்குட்டியில் கேரள அரசு வழங்கிய 54 சென்ட் நிலத்தில் பெரியார் நினைவு மண்டபம் அமைய உள்ளது. ரூ.4 கோடியில் பெரியார் நினைவு மண்டபத்துக்கு தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு, கேரள அமைச்சர் ஷாஜி செரியன் அடிக்கல் நாட்டுகின்றனர். ஆலப்புழாவின் ஆறுக்குட்டியில்
6 மாதத்தில் பெரியார் நினைவு மண்டபத்தை கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆறுக்குட்டியில்
பெரியார் நினைவு மண்டபம் ஏன்?

கேரளத்தின் வைக்கம் நகரில் உள்ள மகாதேவர் கோவில் தெருக்களில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்கக் கோரி 1924 இல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தை நடத்திய தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, அப்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வைக்கம் சென்றார் பெரியார். வைக்கம் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய பெரியாரை அப்போதைய திருவிதாங்கூர் அரசு கைது செய்து ஆறுக்குட்டி சிறையில் வைத்தது.

வைக்கத்தில் கைது செய்யப்பட்ட பெரியார், படகு மூலம் ஆறுக்குட்டி கிராம சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெரியார் சிறையில் இருந்த ஆறுக்குட்டி அருவிக்குத்தி, அருவிக்குட்டி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்துக்காக கேரளத்துக்குச் சென்ற பெரியார், ஆறுக்குட்டியில் இருந்த சிறையில் வைக்கப்பட்டிருந்தார். ஒரு மாத கால சிறைவாசத்தை முடித்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரை மீண்டும் திருவிதாங்கூர் அரசு கைது செய்து, சிறை வைத்தது.

பெரியார் சிறைவாசம் அனுபவித்ததை நினைவு கூரும் வகையில், ஆறுக்குட்டியில் அவரது நினைவு மண்டபம் அமைக்கப்படுகிறது. பெரியார்,
டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் தலைமையிலான போராட்டத்தால் கோவில் தெருக்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கெனவே கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவு மண்டபம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *