புதுடில்லி, ஜூலை 27 வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி ஆகிய இரு இனக் குழுக்களுக்கு இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி தொடங்கிய மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில், 250 பேர் உயிரிழந்ததுடன் 60,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிப்பு
கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 13 முதல் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலும், 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீ்ட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார்.
மாநிலங்களவை செய்திக்குறிப்பில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-இன் கீழ் மணிப்பூர் மாநிலத்தில் 2025, பிப்ரவரி 13-இல் பிரகடனம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்கள் தொடர்ந்து நீட்டிப்பதற்கான ஒப்புதலை அவை வழங்கியுள்ளது. இது, வரும் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.