தமிழ்நாட்டில் முதன்முறையாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை வழங்க சிறப்பு பராமரிப்பு மய்யம் தொடக்கம்

Viduthalai

சென்னை, ஜூலை 17– சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் வகை ஒன்று நீரிழிவு நோய்க்கு சிறப்பு பராமரிப்பு வழங்க புதிய மய்யத்தை தமிழ்நாடு தேசிய சுகாதார மய்யமும், கோயம்புத்தூரை சேர்ந்த இதயங்கள் அறக்கட்டளையும் இணைந்து தொடங்கி உள்ளது.

இந்த மய்யத்தை தமிழ்நாடு தேசிய சுகாதார மய்ய இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் தேரணிராஜன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாராமன் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் லட்சுமி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதுதொடர்பாக நீரிழிவு நோய் மய்யத்தின் தலைமைப் பொறுப்பு மருத்துவர் சிறீதேவி கூறியதாவது:

வகை ஒன்று நீரிழிவு நோய்க்கு (டைப் 1) சிறப்பு பராமரிப்பு மய்யம் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. பிறந்த குழந்தை முதல் 12 வயது குழந்தை வரை இந்த மய்யத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.

இந்நிலையில், வகை ஒன்று நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கு வதற்கு உயர்ரக பேனா இன்சுலின், குளுக்கோமீட்டர் கருவி, பரிசோதனை தாள், பேனா ஊசிகள், உடல் நலம் பெற அறிவுரைகள், பின்விளைவுகளை கண் டறிய பரிசோதனைகள் ஆகியவை புதிதாக திறக்கப்பட்ட மய்யத்தில் வழங்கப்படும். ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யும் கருவிகள் மற்றும் கண் பரிசோதனை செய்யும் ரெடினல் கேமரா கருவி ஆகியவை இந்த மய்யத்தில் உள்ளன.

இந்த மய்யம் தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்த மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது போன்று மய்யங்கள் வரும் மாதங்களில் தஞ்சாவூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *