இன்று ஜூலை 15 – கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசரின் 123ஆவது ஆண்டு பிறந்த நாள். இதையொட்டி “மாலைமலர்” நாளேடு பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலர் என்று நேற்று (14.7.2025) வெளியிட்டுள்ள சிறப்பு மலரில் “காமராஜரும் ஆன்மீகமும்…” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு முக்கியப் பேட்டி அப்படியே எடுத்துக் கொடுக்கப்படுகிறது!
உண்மையான காமராசர் தொண்டர்கள் இதுபற்றி படிக்கவும் சிந்திக்கவும், பரப்பவும் முன் வரவேண்டும்.
– ஆசிரியர்
ஆன்மீகம் பற்றி ஒரு முறை காமராஜர் அளித்த பேட்டி வருமாறு:-
“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”
“இருக்கு, இல்லைங்கிறதைப்பத்தி எனக்கு எந்தக்கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப்போச்சா?”
“கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒன்னாயிருக்கும் போலிருக்கே”
நேரு ரெண்டப்பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனால் மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார். அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில் போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச்சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிறதத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறனும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான் இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா?”.
“அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக்கிறீங்களா?
இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதி ன்னு படைச்சிருக்க மாட்டாரே?” “மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடு ன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன்? சூத்திரன்? ரொம்ப அயோக்கியத்தனம்!”.
“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ளவில்லை?”
“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்” னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது.
நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல் வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக்கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்” பண்றவனோட வேலை.
“நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை. புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்”.
“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா?”
“அதெல்லாம் வேலை, வெட்டியில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத் ராடனம் போறான் எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலை’ன்னு இவன்கிட்டே கோவிச்சுகிட்டான்? அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன். அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா?
“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க? பதினெட்டு வருஷமா கடன் காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக.ஒரு அனாதை இல்லத்துக்கோ. முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லியா.
ஊருக்கு நூறு சாமி வேளைக்கு நூறு பூஜைன்னா. மனுஷன் என்னிக்கு உருப்படறது? நாட்டுல வேலை யில்லாத் திண்டாட்டம். வறுமை, சுகாதாரக்கேடு. ஏற்றத்தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு. பூஜைன்னேன்..?
ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்?”
“அப்படியானா, நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா? இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?”
“லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டு தான் இருப்பாரா?”
அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு “டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான்.
மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பசுவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவராயன், கழு வடையான். முனியன், வீரன்னு கும்பிட்டான்.
எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்? அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்.
மதம் மனிதனுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களப் போக்குமா? இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”
“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே! அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?”
“டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டான்னேன்!
இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா அது மாதிரி அக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான்.
அந்தப் புத்தகங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி.
“அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க.
புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.”
நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல புதுசு கட்டுனதுமில்ல பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம கலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்”.
“மதம் என்பதே மனிதனுக்கு அபின்!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத்தோணுதே?”.
“நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?
ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான்.
கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க்கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.
மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்.”
“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா? அதிலேருந்து எப்போ விலகுனீங்க?”
“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன்.
1930க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன்.
அப்புறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன்.
ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?”
“அப்படியானா மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே அதப்பத்தி?”.
“அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு, ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்மள வாழ்த்தும்னேன்!”
– நன்றி: ‘மாலை மலர்‘, பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலர், 2025
(பக்கம் 36, 37) 14.7.2025