சென்னை, ஜூலை 9- 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளின் மொழி, கணிதப் பாடத்திறனை மேம்படுத்தும் திறன் திட்டத்துக்காக பின்தங்கியவர்களை அடையாளம் காண மதிப்பீடு தேர்வு நடத்தப்படுகிறது.
திறன் திட்டம்
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் மொழி, கணிதப் பாடத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு திறன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2025-2026ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்ததிட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏதுவாக மொழி, கணிதப் பாடத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளை அடையாளம் காணும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி யுள்ளது.
அவ்வாறு அடையாளம் காணுவதற்காக அடிப்படை மதிப்பீடு மேற்கொள்ளப்பட இருக்கிறது. அந்தவகையில், தமிழ், ஆங்கிலத்தில் எழுத்துகள் மற்றும் சொற்களை கண்டறிவதில் இடர் பாடுடையவர்கள், இரண்டெழுத்து மற்றும் மூன்றெழுத்துச் சொற்களை வாசித்தல், எழுதுதல் மற்றும் வாசிப்பதில் இடர்பாடுடையவர்கள், எண்களை எழுதல், வாய்பாடுகள் கூறுதல், இரண்டு இலக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய அடிப்படை கணித செயல்பாடுகளை மேற்கொள்ளு வதில் இடர்பாடுடையவர்களை இந்த அடிப்படை மதிப்பீட்டில் பங்கேற்க செய்யவேண்டும் என உத்தரவு பறந்துள்ளது.
அடிப்படை மதிப்பீடு
இதற்கான அடிப்படை மதிப்பீடு தமிழுக்கு (8.7.2025), ஆங்கிலத்துக்கு (9.7.2025) மற்றும் கணிதத்துக்கு (10.7.2025) அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த அடிப்படை மதிப்பீட்டில் மாணவர்கள் தாங்களாகவே பதில் அளிப்பதை தலைமை ஆசிரியர் களும், வகுப்பாசிரியர்களும் உறுதிசெய்ய வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, அடிப்படை மதிப் பீட்டின் மூலம் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, முதல் 4 வாரங்களுக்கு தமிழுக்கு 90 நிமிடங்கள், ஆங்கிலத்துக்கு 90 நிமிடங்கள், கணிதத்துக்கு 90 நிமிடங்கள் என நாள்தோறும் நேரம் ஒதுக்கி ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். இதனையடுத்து 20 வாரங்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஒரு பாடவேளை என வாரம் 3 பாடவேளைகளை ஒதுக்கி கற்பிக்க வேண்டும்.
கற்பித்தல் பணிகள்
இடையிடையில் வாராந்திர, மாதம் ஒரு முறை என மதிப்பீடு தேர்வு நடத்த வேண்டும். இறுதியாக பிப்ரவரி மாதத்தில் ஒரு மதிப்பீடு தேர்வு நடத்தப்படும்.
இந்தப் பணிகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்டு மொழி, கணிதம் பாடங்களில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் இந்த திட்டத்தின்கீழ் ஆசிரியர்கள் பின்தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி கற்பித்தல் பணிகளில் ஈடுபடதொடங்குவார்கள் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.