தென்சென்னை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உரை

viduthalai
11 Min Read

கீழடி – தமிழன் நாகரிகத்தை மறைக்கும் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம் – பாராட்டுக்குரியது!
விஞ்ஞானபூர்வமாக தயாரிக்கப்பட்ட ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கையை வெளியிடாதது ஏன்?
உயர்நீதிமன்றம் தீர்ப்பு தந்தும் அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாதது – மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்!

சென்னை, ஜூன் 24 கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிடாதது கண்டிக்கத்தக்கது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.

ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில்…

கடந்த 18.6.2025 அன்று காலை  சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு (பானகல் மாளிகை) அருகே, தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

தந்தை பெரியாரின் கூற்று!

‘‘தமிழன் முன்னேறி வருகின்ற இடத்தில், முட்டுக்கட்டையாக தமிழினத்தின் எதிரிதான் இருப்பான்’’ என்று தந்தை பெரியார் சொன்னார்.

அந்த வழியில், அவரின் கூற்றை நிறைவேற்றும் வண்ணம், இன்றைக்குத் தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்துகின்ற கீழடி ஆய்வின் முடிவை மறைக்கின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் முடிவைக் கண்டித்து, மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் என்கின்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைவு செய்து நடத்திக் கொண்டிருக்கின்ற  எங்களுடைய தாய்க்கழகத்தின் ஆசிரியர், தலைமை வகித்துக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா அவர்கள் உள்பட அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாத திராவிடர் கழகத் தோழர்கள்

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கொள்கை ஒன்றுதான் எங்களுக்கு உறுதிமிக்க ஒரே ஒரு செயல்பாடு, அது சுட்டெரிக்கும் வெயில் என்றாலும், கடு மழை என்றாலும் கவலையில்லை என்று எங்களுக்கெல்லாம் உற்சாகமூட்டிக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் தொண்டர்களுக்கும், கலந்துகொண்டிருக்கின்ற தோழமைக் கட்சிகளின் தோழர்களுக்கும் என்னுடைய அன்பான காலை வணக்கம்.

‘‘வரலாறு என்பது வடக்கிலிருந்து எழுதப்படுவது கிடையாது; அது தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்படு வது’’ என்றார் பேரறிஞர் அண்ணா.

‘‘தெற்கிலிருந்துதான் எதுவும் தொடங்கும். ஆனால், தொடர்ச்சியாக தெற்குதான் வஞ்சிக்கப்படுவது’’ என்பது வியட்நாமினுடைய ஒரு மிகப் பிரபலமான பழமொழி.

புரட்சி வீரன் ஓசமின் அடிக்கடி அந்தப் பழமொழியை நினைவூட்டிப் பேசுவதாக, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நினைவுகூர்ந்து, எதனையும் தொடங்குகின்ற உயிர்ச் சக்தி தெற்குக்குத்தான் உண்டு என்று, இந்த இந்தியாவினுடைய வரலாறு, காஷ்மீரத்திலிருந்து எழுதப்படுவது கிடையாது; கன்னியாகுமரியிலிருந்து எழுதப்படவேண்டும் என்று வள்ளுவர் சிலையை நிறுவினார் அன்றைக்கு.

அந்த சிலையினுடைய 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவினை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டி, தொடங்குகின்ற எதுவும் தெற்கிலிருந்து மட்டுமல்ல; தொடங்கிய எதையும் தொடர்ந்து போராடி, சிறப்பாக முடிக்கின்ற பெருமையும் தெற்கிற்குத்தான் உண்டு என்பதை நிலைநாட்டி, இன்றைக்கு, ‘‘அனைத்தும் அனைவருக்கும்’’ என்கின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தி வருகின்றார் எங்களுடைய, நம்முடைய, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

இன்றைக்கு இந்த அரும்பெரும் ஆர்ப்பாட்டத்தை அய்யா அவர்கள் முன்னெடுத்து இருக்கின்ற இதே நாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணியின் சார்பில், மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பாசிசத்தை வேரூன்றத் துடிக்கும்
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.

நம்முடைய பண்பாட்டுப் பகைவர்களை, நம்மு டைய  இன எதிரிகளை நாம் மிக நன்றாக அறிவோம். உணர்ந்திருக்கின்றோம்.

ஆனால், இன்றைய ஆர்ப்பாட்டம், இன்றைய தினத்திற்கான ஆர்ப்பாட்டம் என்பது, அறிந்த, உணர்ந்த அந்த எதிரிகளை மிகமிக குறிப்பாக பாசி சத்தைத் தமிழ்நாட்டில் வேரூன்றத் துடிக்கின்ற
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசை, மக்களிடையே தோலு ரித்துக் காட்டுவதற்காகத்தான் இந்த எழுச்சிமிகு போராட்டம்.

கீழடி என்பது, நம்முடைய தமிழர்களின் தொன்மையான பண்பாடு, நாகரிகத்தின் தாய்மடி, தெற்கு தமிழ்நாடுதான் மனித இனத்தின் தொடக்கம் என்பதை உலகறிய உணரச் செய்திருக்கின்ற தாய்மடி! அதனை மண்மூடி மறைக்கின்ற முயற்சியில் இறங்கியிருக்கின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசை, நாம் கண்டிப்பதோடு, பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்றுள்ளார்கள்.  எப்படி அவர்கள் ‘‘ஒவ்வொன்றாக – இந்த உடை அணியுங்கள் என்றார்கள், இந்த உணவைச் சாப்பிடுங்கள், இந்த மொழியைப் பேசுங்கள்’’ என்றார்கள்,

இன்றைக்கு, இதுவல்ல வரலாறு; நாங்கள் சொல்வது தான் வரலாறு என்று சரசுவதி நதி இருந்தது உண்மை; வேத காலம் இருந்தது உண்மை; சமஸ்கிருதம்தான் ஆதிமொழி என்பது உண்மை என்று திரித்துப் புரட்டு கிறார்கள்; அதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், கீழடியின் தொன்மையை, பெருமையை மூடி மறைக்கின்ற அந்த பா.ஜ.க. அரசினைக் கண்டித்து, மிக அருமையான தீர்மானங்களை அய்யா ஆசிரியர் அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றார்கள்.

அய்யா அவர்களுக்கு அன்பார்ந்த மனமார்ந்த நன்றியும், பாராட்டுகளும்!

தோழமையுடன், அன்பிற்குரிய நண்பர் தலைவர் தொல்.திருமா அவர்கள், அடுத்து தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டிய ஒரு முக்கியமான முடிவு குறித்தும், அதற்கான நிதியை தமிழ்நாடு அரசே ஒதுக்கவேண்டும் என்பது குறித்தும், இங்கே ஒரு கோரிக்கையாக, வேண்டுகோளாக வைத்திருக்கின்றார். அதனையும், தீர்மானத்தில் இணைத்து, உங்களிடையே பகிர்ந்திருக்கின்றார் ஆசிரியர் அவர்கள்.

நம்முடைய முதலமைச்சரின்
தொடர் முயற்சிகள்!

‘‘தமிழன் தாழ்ந்தால், நாங்கள் முட்டுக்கொடுப்போம்; தமிழன் வாழ்ந்தால், நாங்கள் விட்டுக் கொடுப்போம்’’ என்பதைத் தன்னுடைய உயிர்மூச்சாகக் கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் அவர்கள், 2019 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கீழடி குறித்து, அந்த அறிக்கைகளை ஏன் ஒன்றிய அரசாங்கம் வெளியிட மறுக்கிறது; ஏன் ஆய்வை தடுத்துவிட்டு, கைவிடுகின்றது. தொடர்ச்சியாக அதனை தமிழ்நாடு அரசு மட்டும்தான் முன்னெடுக்கவேண்டுமா? ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை வெளியிடுக என்று தொடர்ச்சியான போராட்டத்தை, 2019 ஆம் ஆண்டிலிருந்து  முன்னெடுத்து வருகின்றார். இந்தக் கணம்வரை அதில் கொஞ்சமும் தொய்வில்லாமல் செய்து வருகின்றார்.

நிச்சயமாக, உங்களுடைய கோரிக்கையும் அவரு டைய கவனத்திற்குச் சென்று, அதில் மிகச் சரியான ஒரு முடிவை எடுப்பார்.

மக்களுடைய எழுச்சிமிகுந்த போராட்டமாக அதனை மாற்றவேண்டும் என்பதற்காகத்தான், இந்த முனைப்பு இங்கே செயல்படப்படுகின்றது என்பதை அவர் மிக நன்றாக அறிவார்.

கீழடியில், 2016 ஆம் ஆண்டு, முதலாம், இரண்டாம், மூன்றாம் கட்ட  ஆய்வுகளை ஒன்றிய அரசாங்கம் நடத்துகின்றது. ஆறிலிருந்து, 9 ஆம் கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசாங்கம் நடத்துகின்றது.

அந்த ஒன்றாம், மூன்றாம் கட்ட அகழாய்வுகளின் முடிவுகளை ஒன்றிய அரசாங்கம் வெளியிடவில்லை. வெளியிடுங்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டபோது, அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் என்ன சொல்லிற்று? இன்னும் 9 மாதங்களில் அந்த முடிவுகளை நாங்கள் வெளியிடுவோம் என்று சொன்னது. 16 மாதங்கள் ஆகியும் அந்த முடிவுகளை வெளியிடவில்லை.

ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா அளித்த அறிக்கையை வெளியிடாதது ஏன்?

இந்த நிலையில், நம்முடைய அகழாய்வுத் துறை யினுடைய மிக விரிவான அறிக்கையை, நண்பர் இங்கே சொன்னதுபோல, 982 பக்க அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்கள் சமர்ப்பிக்கின்றார்; இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. பதில் கிடையாது. ஆனால், அதற்குப் பதிலாக, இந்த ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம், ஆய்வாளரைப் பார்த்து என்ன சொல்லுகிறது என்றால், ‘‘சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் அறிக்கையை, திருத்தி சீரமைத்து, அதனை ‘நம்பகத்தன்மையோடு’ மீண்டும் சமர்ப்பிக்கவேண்டும்’’ என்று சொல்கிறது.

யார் நம்முடைய நம்பகத்தன்மையைத் தீர்மானிப்பது? வரலாற்றில், எந்த ஆதாரமும் இல்லாத புராணங்களை வரலாறு என்று புரட்டுக் கதைகளைக் கூறி,  மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்ற நீங்களா, எங்களிடம் நம்பகத்தன்மை குறித்து கேள்வி கேட்பது?

உலக மக்களுக்கு நாகரிகம் கற்றுத் தந்தவர்கள் தமிழர்கள்.

முதன்முதலில், உழவுத் தொழிலையும், கடல் வாழ்வையும் முன்னெடுத்தவர்கள் தமிழர்கள்.

முதன்முதலில், வீதியமைப்பு, வீடமைப்பு, நகர மைப்பு, நாடமைப்பு இவற்றைக் கண்டவர்கள் தமிழர்கள்.

சட்டக் கூறுகளும், கலைகளும், பிற ஆட்சிக் கூறுகளும், முதன்முதலில் நாகரிக சமுதாயம் இங்குதான் வாழ்ந்தது என்பதற்கான அடையாளங்களையும் உடையவர்கள் தமிழர்கள்.

வியன்னாவில் இருக்கின்ற அருங்காட்சியகத்தில், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த தமிழர் ஒருவருடைய  வணிகம் குறித்த பதிவு இருப்பதாக தொல்லியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

கொசைநர் என்கின்ற ஜெர்மானிய அறிஞர், அய்ரோப்பாவிலும், மேற்கு ஆசியாவிலும் அநேகமான இடப்பெயர்கள் தமிழப் பெயர்களாக இருக்கின்றன என்பதைப் பதிவு செய்திருக்கின்றார்.

கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் தோன்றியது நமது நாகரிகம்!

கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் தோன்றிய நாகரிகம், தமிழர் நாகரிகம், திராவிடர் நாகரிகம்தான் இன்றைக்கு நம்முடைய அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்கள், அதனை ஆய்வு மூலமாக நிரூபணம் செய்து, சிந்துவெளியில் இருப்பதே திராவிடர் நாகரிகம்தான் என்பதை, ‘‘அது திராவிடர் நாகரிகமாக மலர்ந்து, பின்னர் சுமேரிய நாகரிகமாக வளர்ந்து திரிந்தது’’ என்பதை, ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்த ஹீராஸ் என்கின்ற பெருமகனாரும் நிறுவியிருக்கின்றார்.

அதனால்தான், அவர் தன்னை பெருமையாக, ‘‘நான் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்த திராவிடன்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அனைத்து மொழிக் குடும்பங்களுக்கும் தொல் தமிழே தாய்மையான முன்னோடி மொழி – இந்தோ – ஆரியன் மொழிகள் உள்பட – தாய்மையான முன்னோடி மொழி என்று, கால்டுவெல் உள்பட அனைத்து அறிஞர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், இன்றைக்கு அந்த முயற்சியை இராஜா ராமன், பீலால் போன்றவர்கள் சிந்துவெளி நாகரிகம்தான் தலைசிறந்தது என்கின்ற வழியிலே ஏற்கெனவே அதனைத் தொடங்கி விட்டார்கள்.

ஆனால், திராவிடர் நாகரிகம்தான் சிந்து சமவெளி யினுடைய நாகரிகம் என்பதை தன்னுடைய ‘‘சிந்து வெளியில் முந்து தமிழ்’’ என்கின்ற புத்தகத்தில் பூரணசந்திர ஜீவாவும், ‘‘தி ஹிந்து ஸ்கிரிப்ட் திரவிடியன்’’ என்கின்ற புத்தகத்தில், நம்முடைய மரியாதைக்குரிய இரா.மதிவாணனும் சுட்டிக்காட்டி, அதில் இருக்கின்ற அத்துணைத் தொல் நாகரிக எழுத்துகளும், நம்முடைய திராவிட தமிழ் எழுத்துகள் என்பதைத் தொல்காப்பிய தரவுகளோடு நிறுவியிருக்கிறார்கள்.

அதைவிட அதனை ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூ பிக்க, ஆதிச்சநல்லூர் தாழிகளைவிட, நம்முடைய மயிலாடுதுறையில் கிடைத்திருக்கின்ற கல்வெட்டு களைவிட வேறு என்னவேண்டும்?

கீழடி ஆய்வு

இன்றைக்கு நம்முடைய கீழடியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் 5,700–க்கும் மேற்பட்ட குறிப்பேடுகள் கிடைத்திருக்கின்றன.

கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால், அந்த ஓடுகளில் பொறிக்கப்பட்டிருப்பது ஆதன், உதிரன், குவியன் இப்படி சாதாரண சாமானிய மக்களுடைய பெயரின் எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன.  அரசர்களுடைய பெயர்களை அல்ல.

எதைச் சுட்டுகின்றது கீழடி ஆய்வுகள்?

அறிவியல்பூர்வமாக அந்தக் காலக் கணக்கின்படி, 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், வைகை நதிக் கரையில், நகர நாகரிகம்மிக்க அந்த நாகரிகம் இருந்தது என்பதையும், அனைத்துச் சமூகத்தைச் சார்ந்தவர்களும் எழுத்தறிவு, படிப்பறிவு பெற்றவர்களாக இருந்தார்கள்; அது ஒரு சில சமூகத்திற்கு மட்டுமே உரிய சொத்தல்ல என்பதையும் அது சுட்டுகின்றது.

இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதுபோல, கார்பன் கரி – கார்பன் டேட்டிங் முறைப்படிகூட, அது 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எங்களுடைய நம்பகத்தன்மை, எங்களுடைய பண்பாட்டுத் தொடர்ச்சி என்று, தமிழர்கள் தங்களு டைய நீண்ட நெடிய தினைக் கோட்பாடு என்பது இன்றைக்கு உலகத்தில் எந்த இனத்திற்கும் இல்லாத, நம் இனத்திற்கு மட்டுமே உரிய தனிப்பட்ட பண்பாடு. அத்தகைய நீண்ட நெடிய தொடர்ச்சியை, கீழடி உறு திப்படுத்தியிருப்பதால், அதுகுறித்து பயப்படுகிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள், 5 கோடி ரூபாயிலிருந்து, 7 கோடி ரூபாய் என்று கூடுதலாக  நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். மேலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, இந்தப் பெருமையை உலகம் உணரும்வரை அவர் கண்துஞ்சமாட்டார்.

உண்மை ஆய்வறிக்கையை சமர்ப்பித்த ஆய்வாள ரைப் பல இடங்களுக்கும் பந்தாடுவது ஏன்?

மிக முக்கியமான இன்னொரு விஷயம் என்ன வென்றால், ஆய்வறிக்கையை சமர்ப்பித்த ஒரே காரணத்திற்காக, ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா, பந்தாடப்படுகிறார்.

கோவா, கவுகாத்தி, டில்லி, கூர்கான் – அதைப்பற்றிக் கவலைப்படாமல், அவர் உண்மையின் பக்கமே நிற்கின்றார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

அவரோடு இணைந்து, இந்த அறிக்கை என்பது, எங்களுடைய தாய், தமிழ் மொழி, தமிழ் இனத்தின் தொன்மையான- அந்தத் தொன்மைக்குச் சான்றான அறிக்கை என்பதை நாம் நிச்சயமாக உலகம் உணரச் செய்வோம்.

தமிழ்நாடு அரசாங்கம், குறிப்பாக நம்முடைய  முதலமைச்சர், இந்தப் பணி ஓயும்வரை, நாங்கள் கண்டிப்பாகப் போராடுவோம் என்பதை உறுதிப்படத் தெரிவித்திருக்கின்றார்.

இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் ஒருமுறை, விதி எண்: 377 -இன் கீழ் நான் பேசியிருக்கின்றேன்.

அந்த விதியின்கீழ் நாம் கேள்வியெழுப்பி பேசினால், அதற்கு அவர்கள் நிச்சயமாகப் பதில் தரவேண்டும். அந்தப் பதில் இன்றுவரை தரவில்லை.

அந்த உரையின் சுருக்கமாகச் சொல்கிறேன் – 6.8.2022 ஆம் ஆண்டு அன்று நான் பேசியது –

நாடாளுமன்றத்தில்
நான் பேசியது என்ன?

‘‘தமிழ்நாட்டின் இரும்புக்கால அகழாய்வுத் தளமான மயிலாடும்பாறை, கீழடி உள்ளிட்ட இடங்களை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கவும், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி, கொற்கை, மயிலாடும்பாறை, கொடுமணல் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஏழு இடங்களுக்கு அதிக நிதி மற்றும் முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நாடாளுமன்ற விதி 377-இன்கீழ் வலி யுறுத்துகின்றேன்.

மேலும், தமிழ்நாட்டின் தொன்மைக்கான சான்றுகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் முயற்சிகளை ஆதரிக்கவேண்டும். தமிழ்நாட்டின் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்’’ என்றும்,

பாடத் திட்டத்தில் தமிழ்நாட்டின் வரலாற்றைக் கொண்டுவரவேண்டும்!

‘‘பள்ளி மற்றும் பல்கலைக் கழகப் பாடத் திட்டங்களில், நீங்கள் திருத்துகின்றீர்கள் அல்லவா – திப்புசுல்தான் வரலாற்றிலே இப்போது கிடையாது – மொகலாயர் ஆட்சி கிடையாது; மாறாக, எங்கள் தமிழ்நாட்டு வரலாற்றை அங்கே கொண்டு வாருங்கள். இந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், ‘ஆன்சைட்’ அருங்காட்சியகங்களை உருவாக்குங்கள். உத்தரப்பிரதேசத்திலும், குஜராத்திலும் அறிவிக்கப்பட்ட பகுதிகள் –  National Heritage Important என்று அறிவித்திருக்கின்றீர்களே, அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள இத்தகைய இடங்களையும் அறிவியுங்கள்’’ என்று கோரிக்கை வைத்திருக்கின்றேன்.

இவை அனைத்தும் நமக்கு முக்கியம்.

ஏனென்றால், சிங்கங்கள் தங்கள் வரலாறுகளை சரியாக எழுதவில்லை என்றால், வேட்டைக்காரர்கள் எழுதியதே சரித்திரம் என்று தவறாகப் பதியப்பட்டுவிடும்.

நன்றி!

– இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *