ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் பஞ்சாயத்தில் அமைந்த ஒரு கிராமத்தில், ஒரு பழங்குடி இளம் பெண், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஓர் இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜாதிமறுப்புத் திருமணம்,”சமூக விதிகளை மீறிய செயல்” எனக்கூறி பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.
40 ஆண்களுக்கு மொட்டை
கிராமத்தார்கள் இந்த திருமணத்தை அங்கீகரிக்க மறுத்து, குடும்பத்தை கிராமத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்பு, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் தண்டனை உத்தரவுப்படி, இளம் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 40 ஆண்கள் தங்கள் தலையை மொட்டையடிக்க மற்றும் அவர்களது ஆடுமாடுகளை பறித்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
இந்த சம்பவம், கிராம மக்களிடையே பயத்தையும், குடும்பத்தினருக்கு அவமானத்தையும் ஏற்படுத்தியது.
இந்த கொடூர நிகழ்வு, ஒடிசாவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது
இந்திய அரசமைப்பு, ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் சமூக புறக்கணிப்பை தடை செய்கிறது. தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 (Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act) இதுபோன்ற செயல்களை குற்றமாகக் கருதுகிறது.
இந்த கொடூர நிகழ்வு குறித்து உள்ளூர் காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டது ஆனால் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சினை என்று காவல்துறை புகாரைப் பதிவு செய்யவில்லை.
ஜாதி மறுப்புத் திருமணத்துக்கு ஊக்கத் தொகை
இந்தியாவில் ஜாதி மறுப்புத் திருமணங்கள், சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது. இதற்காக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு ஊக்கத்தொகை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. மகாராட்டிராவில், தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் மேல் ஜாதியினரை திருமணம் செய்யும் இணையர்களுக்கு 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற திட்டங்கள் இருந்தபோதிலும், கிராமப்புறங்களில் ஜாதி அடிப்படையிலான எதிர்ப்பு மற்றும் பழைமைவாத மனநிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஜான்சி மாவட்டத்தில்…
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், ஒரு பெண் காவல்துறை அதிகாரி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியைத் திருமணம் செய்ததற்காக அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, சமூக புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டது.
இது முழுவதும் பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தொடர் நிகழ்வாக போய்க் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.