பெரம்பலூர், ஜூன் 18- பேருந்து வசதி கிடைக்கப்பெறாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்றைய முன்தினம் (16.06.2025) தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய விரிவான சிற்றுந்து திட்டம் 2024ன் கீழ், தமிழ்நாடு முழுவதும் 3,103 சிற்றுந்து சேவைகளை தொடங்கிவைத்தார்.
சிற்றுந்து சேவை
அதனைத்தொடர்ந்து, புதிய விரிவான சிற்றுந்து திட்டம் 2024ன் கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கான சிற்றுந்து சேவைகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் நேற்று (17.06.2025) பாலக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்து சிற்றுந்தில் சிறிது தூரம் பயணம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு முதன்மை செயலாளர்/போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 31 சிற்றுந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் முதல் நத்தக்காடு, ஆய்குடி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முதல் பெரியவடகரை, செட்டிக்குளம், விசுவகுடி, அம்மாபாளையம் முதல் துறைமங்கலம் மின்சாரத்துறை அலுவலகம், களரம்பட்டி முதல் பெரம்பலூர் புதியபேருந்து நிலையம், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதல் வாலாஜா நகரம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் முதல் தனலட்சமி சீனிவாசன் பல்கலைக்கழகம், பாடாலூர் முதல் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் எதுமலை, கேந்திரவித்யாலயா பள்ளி முதல் அழகாபுரி, கிருஷ்ணாபுரம் முதல் கொட்டாரக்குன்று, கோனேரிப்பாளையம் முதல் கீழப்புலியூர், வேப்பந்தட்டை முதல் வி.களத்தூர் உள்ளிட்ட ஏற்கனவே சிற்றுந்துகள் இயக்கப்பட்ட 30 வழித்தடங்களிலும், செங்குணம் முதல் செஞ்சேரி வரை புதிய வழித்தடத்திலும் என மொத்தம் 31 சிற்றுந்துகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டது,