இடைநிற்றல் இல்லாத சாதனை படைக்கும் தமிழ்நாடு!

viduthalai
4 Min Read

பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் பிரச்சினை
(Drop Outs) மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.  (குறள் 400)

என்பார் திருவள்ளுவர். கல்விச் செல்வம் என்பதுதான் அழியாதது, மற்றவை ஒருவருக்குச் செல்வமாகாது!

இந்தியாவைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்க உரிமைப் படைத்தவர்களாக இருந்தனர் – இதற்கு அடிப்படையாக அமைந்தவை ஹிந்து மதமும், அதன் சாஸ்திரங்களும் – அவற்றைப் பின்பற்றி ஆட்சி செய்த அரசர்களைப் பொறுத்தேயாகும்.

இன்றைக்கு இந்தியாவில் தென்னகம் அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம் கல்வியில் முன்னேறி நிற்கும் மாநிலங் களாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நீதிக்கட்சி – சுயமரியாதை இயக்கம் – திராவிட இயக்கம் ஆட்சி அமைப்பு முறையில் கல்வியை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், காலங்காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட பகுதி மக்கள் பால் செலுத்தப்பட்ட கரிசனமும், ஆக்க ரீதியான முன்னுரிமைகளும், நல் வாய்ப்புகளுமே முக்கிய காரணங்களாகும்.

காமராசர் ஆட்சியின் பங்களிப்பும்  மிகவும் முக்கியமான தாகும்.

காலம் காலமாகப் பிறப்பின் அடிப்படையில் மேலாதிக்கமும், கல்வி வாய்ப்பும் பெற்று விளங்கிய உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் எதிர்ப்புகள், முட்டுக்கட்டைகளையும் முகங் கொடுத்து உடைத்துத் தள்ளி, நம் மக்கள் கல்வி வளர்ச்சி பெற்று வருகின்றனர்.

இன்றைய ‘திராவிட மாடல்’ அரசு – கல்விக்கு முன்னு ரிமை கொடுத்துப் பல்லாற்றானும் கை தூக்கி விட்டு வருகிறது!

இடைநிலைக் கல்வி என்னும் எட்டாம் வகுப்பு வரை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இடை நிற்றல் என்பது சுழியம் என்பது சாதாரணமானதல்ல!

இந்தியாவிலேயே இந்தச் சாதனையை எட்டிய மாநிலம் தமிழ்நாடு என்கிறபோது நம் உணர்வுகள் எல்லாம் சிலிர்க் கின்றன!

இதனை ஒழிக்கத்தான் 5ஆம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் அரசு தேர்வு என்கிற தேசிய கல்வித் திட்டத்தைத் திணிக்கிறது ஒன்றிய பிஜேபி – பார்ப்பன அரசு. இதனை முறியடிப்போம்!

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் விருதுநகர் மாவட்டத்தை எடுத்துக்காட்டி, சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 2அவர்களின் பதிவு குறிப்பிடத்தக்கதாகும்.

‘‘கடந்த நான்கு ஆண்டு காலமாக இடைநிற்றலே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம். இந்த நிலை ெதாடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வாழ்த்துகள்’’

‘‘ஆசிரியர்கள், பொது மக்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இடை நிற்றல் இல்லாமை என்ற இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும், உங்கள் பகுதியில் பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் அவர்களைக் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’. என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்’’

‘‘காலை உணவுத் திட்டம் திறன்மிகு வகுப்பறைகள் என ஒவ்வொரு நிலையிலும் மாணவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல  அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உறுதி செய்வோம்!’’ என்று நமது முதலமைச்சர் சமூக வலைதளத்தில் பதித்திருப்பது அடி கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

தனியார் பள்ளிகள் தான் தரமானவை என்ற மனப்பான்மை மக்களிடம் வேர்ப்பிடித்திருந்தது என்பது உண்மைதான்; அதனைத் தலை கீழாகப் புரட்டிப் போடும் வகையில் அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சி, ஒன்றிய பள்ளிகள் எல்லாம் – எல்லா வகையான வசதிகளும், வாய்ப்புகளும் ஒளிரும் வண்ணம் நமது ‘திராவிட மாடல்’ அரசு, சரியான திட்டங்களுடன் முன்னுரிமை அளித்துச் செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, வகுப் பறைகள், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பள்ளிச் சூழலை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுதான் இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி, இலவசப் பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் முதலியவை கல்வியின் பக்கம் மிகச் சிறந்த வகையில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்திய காலை சிற்றுண்டித் திட்டம் வெளிநாடுகளையும் ஈர்த்துள்ளது என்றால், இதன் சிறப்பை சிலாகிக்கவும் வேண்டுமோ!

‘புதுமைப் பெண் திட்டம்’ – ‘தவப் புதல்வன் திட்டம்’ என்பன எல்லாம் எங்கும் கேள்விப்பட்டிராதவையே!

‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?’ என்ற பழமொழி எரிக்கப்பட்டுச் சாம்பலாயிற்று. முதுகலைப் பட்டப் படிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலம்!

பெண்களின் திருமண வயது 18 என்று சட்டம் கூறினாலும், தந்தை பெரியார் கூறுவார், ‘பெண்கள் எவ்வளவுப் படிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அது முடிந்த பின்னர்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம்’ என்று கூறியதையும் இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தமானதாகும்.

18 வயதடைந்தவர்களுக்கு இப்பொழுது வாக்குரிமை கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 வயது அடைந்த வாக்குரிமை பெற்றுள்ள இருபால் இளைஞர்களும் தங்களைக் கல்வி ஏணி வழி உச்சத்திற்கு அழைத்துச் செல்லும், ‘திராவிட மாடல் அரசு மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவது தங்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் என்ற கருத்தோட்டத்தோடு, நன்றி உணர்வோடு செயல்பட வேண்டும் – செயல்படுவார்கள் என்பதிலும் அய்யம் இல்லை – இல்லவே இல்லை.

‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வாழ்த்துகள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *