அருண் அசோகன் சமூகச் செயல்பாட்டாளர்

Viduthalai
5 Min Read

உலகின் பல பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக, பெரும் மக்கள் கூட்டத்துக்குக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, இந்தியாவில் இந்த உரிமை மறுப்பு ஒரு சமூக மரபாகவே தொடர்ந்தது. அய்ரோப்பிய மறுமலர்ச்சிக் காலம், ஆசிய – ஆப்ரிக்க நாடுகளின் விடுதலை இயக்கங்கள், சீர்திருத்தங்களுக்கான கிளர்ச்சிகள் என்று பல்வேறு வடிவங்களில் தோன்றிய முற்போக்கு இயக்கங்கள் காரணமாகக் கல்வி கற்கும் உரிமை உள்ளிட்ட சில உரிமைகள் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்தன.

அரசியல் விடுதலையடைந்த இந்தியாவில், குடிமக்களின் கல்வியறிவு மேம்பட, இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறைப்படி, ஒன்றிய  மாநில அரசாங்கங்கள் பல கொள்கை முடிவுகளை, திட்டங்களை மேற்கொண்டன. அதன் விளைவாகக் கடந்த காலங்களில், கல்வித் துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தேசத்தின் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும்படியான சில நிகழ்வுப் போக்குகளும் ஏற்பட்டிருக்கின்றன. நுழைவுத் தேர்வுகள், கூடுதலான பொதுத் தேர்வுகள் என்னும் பெயரில் வாய்ப்புகள் மறுக்கப் படுவதாக எழுந்திருக்கும் விமர்சனங்கள் புறந்தள்ளத்தக்கவை அல்ல.

நுழைவுத் தேர்வுகளும் சர்ச்சைகளும்

மருத்துவப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையைத் தீர்மானிக்கும் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகப் பெற்றோர்கள், மாணவர் களிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தி பற்றி நிறைய விவாதங்கள் நடக்கின்றன. நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட மேலும் பல காரணங்களால் இந்தியாவில் மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியாத ஆயிரக்கணக்கான மாணவர்கள் ரஷ்யா, வியட்நாம் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று உரிய தகுதிகளுடன் தலைசிறந்த மருத்துவர்களாக இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.

2005 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப் படையில் மருத்துவம், பொறியியல், சட்டம் இன்ன பிற பட்டப்படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதற்கான சூழல் ஏற்பட்டது. மேலும், மாநிலப் பல்கலைக்கழகங்கள், ஒன்றியப் பல்கலைக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், தொழிற் கல்விப் பட்டப்படிப்பு ஆகியவற்றுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது. இதற்காகவே, தேசியத் தேர்வு முகமையும் (NTA) நிறுவப்பட்டது.

மாணவர் அனைவரும் ஒரே தேர்வை எழுத வேண்டி இருப்பதால், இத்தகைய நுழைவுத் தேர்வு முறையின் வழியாக, எவ்விதக் குளறுபடிகளும் இல்லாத, நியாயமான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாக நம்பப் படுகிறது. இந்தியாவில், நுழைவுத் தேர்வுகள் சட்டபூர்வமானதும், மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. உண்மையில், கவனமாக ஆய்வுசெய்து பார்த்தோமேயானால், நுழைவுத் தேர்வு முறை குறித்த கூற்றுகளும் நம்பிக்கைகளும் கேள்விக்கு உரியவையாக ஆகிவிடுகின்றன.

மகாராஷ்டிரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுவசதி மேம்பாட்டுக் குழுமத்தில் ஆள்சேர்க்கைக்கான தேர்வு நடைபெற்றபோது, தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகிவிட்டன. ஒன்றியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் நாட்டையே உலுக்கியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த வியாபம் தேர்வு முறைகேடுகளில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், மாணவர்கள், இடைத்தரகர்கள் ஈடுபட்டு இருந்தது அம்பலமாகியது. எண்ணற்ற மர்ம மரணங்களையும் நாம் கேள்வியுற் றோம். நீட் நுழைவுத் தேர்வு குறித்த சர்ச்சை களுக்குப் பஞ்சமில்லை என்றே சொல்லலாம். நீட் குளறுபடிகள், முறைகேடுகள், சிபிஐ விசாரணையில் தொடங்கி உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் வரை பேசுபொருளாகின.

இந்தியா, சீனா, அமெரிக்கா என்று அநேகமாக அனைத்து நாடுகளிலும் நுழைவுத் தேர்வுகள் ‘தெரிவுவிடை வினா ‘ (Multiple Choice Questions) வகைப்பட்ட தேர்வுகளாகவே நடத்தப்படுகின்றன. இந்த வகைப்பட்ட தேர்வுகள் மூலமாக மாணவர்களின் அகநிலை அறிவாற்றலை (Subjective Knowledge) மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்பதுதான் அறிவியல் பூர்வமான உண்மை. இது போன்ற இயந்திரத் தனமான தேர்வுகள், மாணவர்களிடையே ‘கண்மூடித்தனமான மனப்பாடம்’ (Mindless Memorization) செய்யும் பழக்கத்தையும், தகவல்களைச் சேகரித்து நினைவில் இருத்திக் கொள்ளும் ஆற்றலையும் மட்டுமே உற்பத்தி செய்பவையாக உள்ளன. குறைபாடுகள் நிறைந்த இந்த நுழைவுத் தேர்வு முறை மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாவதாகப் பல கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்தும் தாக்கங்கள்

நுழைவுத் தேர்வுகள் உடல்ரீதியிலான பிரச்சினைகள் தொடங்கி உளவியல் பிரச்சினைகள் வரை மாணவர்களைப் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றன. வாழ்க்கை மீதான மாணவர்களின் நம்பிக்கையை உடைத்தெறிந்து, தற்கொலையின் விளிம்புக்கு அவர்களைத் தள்ளுகின்றன. அவர்களின் பெற்றோர் களும் கடுமையான மன உளைச்சலுக்கு இரையாகிறார்கள். நகரப் பகுதிகளில் வாழ்ந்து வரும், சமூகப் பொருளாதாரரீதியில் பின்தங்கி உள்ள மாணவர்கள், ஊரகப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துவருகிறார்கள்.

நுழைவுத் தேர்வு முறையின் விளைவாக எண்ணற்ற தனியார் பயிற்சி மையங்கள் ஆங்காங்கே புற்றீசல் போலத் தோன்றி உள்ளன. இந்தியாவில், தனியார் பயிற்சி மையங்கள் ஒரு பிரத்யேகமான தொழில் துறையாகவே விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்தத் துறையின் மதிப்பு, தற்போதைய நிலவரப்படி ஏறத்தாழ 58,000 கோடி ரூபாய் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பயிற்சி மையங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் இயங்குகின்றன. பெரும் பணக்காரர்கள், உயர் ஒன்றிய தரக் குடும்பத்து மாணவர்கள் மட்டுமே இந்த நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெற முடிகிறது. பணக்காரர்கள், ஏழைகள் என்னும் பிளவு இங்கே மேலும் வலுப்பெறுகிறது. இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகக் கல்வி கற்பதற்கான வாய்ப்பிலும் சமத்துவமின்மை ஏற்படுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்வு என்ற கருத்தாக் கத்தை தேசிய கல்விக் கொள்கை 2020 முன்னிறுத்துகிறது. மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறை  (Centralised Examination) என்பது இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறைமையில் அதிர்வலைகளை உண்டாக்குகிறது. மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும், தேவைக்கேற்பக் கல்விக் கொள்கைகளும் பாடத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்றதொரு சூழலில், மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், பெரும் சமூக-அரசியல் பின்னடைவு ஏற்படவே அதிக வாய்ப்பு இருக்கிறது

வல்லமையை வெளிக்கொணரும் கல்விமுறை

லாபம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பொருளாதார அமைப்பில், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ‘மக்களாகிய நாம்’ (We The People) முதலில் கசடறக் கற்க வேண்டும். கல்வி என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ளார்ந்து உறைந்து கிடக்கும் வல்லமையையும், திறமைகளையும் வெளிக்கொணருவதாக இருந்திட வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி வணிகமயமாவதை அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கக் கல்விக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும். வாய்ப்புகளை மறுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் கல்விமுறை, நுழைவுத் தேர்வுகள் குறித்துப் பொது விவாதங்கள் நடைபெற வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை ஏழை, எளிய மக்களுக்கும் உரிய வாய்ப்புகள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் முற்போக்கான, சமத்துவம் நிறைந்த கல்விக் கொள்கை, திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நன்றி: ‘இந்து தமிழ் திசை’ 17.6.2025

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *