கோபி மாவட்டத்தில் ஒரு மாநாடு போல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடைக்கு எடை நாணயங்கள், அரிசி வழங்குகின்ற நிகழ்வும் நடைபெற்றது. மேடையில் பெரிய தராசு கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வீரியமான ஒலி முழக்கங்களுடன் அமர வைக்கப்பட்டார். இன்னொரு பக்கம் நாணயங்கள் அடங்கிய பைகள் வைக்கப்பட்டன. அந்த நாணயங்களின் மதிப்பு 30,000/- ரூபாய். இந்நிகழ்வை மாவட்டக் காப்பாளர் ந. சிவலிங்கம் ஒருங்கிணைத்தார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், இதுவரை ஆசிரியருக்கு எடைக்கு எடை கொடுக்கப்பட்ட நிகழ்வுகளை பட்டியலிட்டார். எடைக்குஎடை நாணயம் வழங்கப்படதற்குப் பிறகு எடைக்கு எடை அரிசி வழங்கப்பட்டது. முடிந்தவுடன் மாவட்டத் தலைவர் சென்னியப்பன் ஆசிரியர் அவர்களின் எடைக்கு எடை வழங்கப்பட்ட அரிசி இங்கே ஏலம் விடப்படும் என்று கூறி ஏலத் தொகை ரூ.3,000; உயர்த்தி கேட்பவர்கள் கேட்கலாம் என்று அறிவித்தார். ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் 7,000/- ரூபாய் உயர்த்தி 10,000/- ரூபாய்க்கு கேட்டார். பலத்த கைதட்டல்களுக்கிடையில் ஏலம் இறுதி செய்யப்பட்டது. உரிய தொகையைக் கழகத் தலைவரிடம் கொடுத்து தி.மு.க. மாவட்டச் செயலாளர் அரிசியைப் பெற்றுக்கொண்டார்.