கரும்புகை அந்நேரம் சூழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதற்கு சில விநாடிகள் முன்பு வெடிகுண்டு வெடித்தது போன்றதோர் ஓசை. எழுந்த நெருப்பு உருண்டை வானோக்கிச் சென்று மறைந்து, கரும்புகை வெளிப்படத் தொடங்கியது. என்ன ஏதென்று அறிவதற்கு முன்பே, மரண ஓலங்கள் கேட்டன. அடுத்தடுத்த நிமிடங்களில் உலகெங்கும் செய்தி பறந்தது. இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பேருடன் பயணித்த விமானம் தரையிலிருந்து மேலேறிய சில விநாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தில் மோதி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்தோர் மட்டுமல்லாமல், விடுதியிலிருந்தோரும் உயிரிழந்தனர்.
மீட்புப் படைகள் விரைந்தன. தீயணைப்பு வாகனங்கள் நீரைப் பாய்ச்சின. சில தன்னார்வலர்களும் இணைந்திருந்தார்கள். ஊடகங்கள் நேரலைகளைத் தொடங்கின. விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆராயத் தொடங்கின. விமானம் மேலெழ முடியாமல் போனதற்கான காரணம் என்னென்று தொழில்நுட்ப ரீதியான காரணங்கள் அலசப்பட்டன. போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனத்தில் அலட்சியப் போக்குகளை அந்நிறுவனத்தின் மேனாள் பணியாளர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவது எல்லாம் கவனம் பெற்றன.
பொய் மூட்டை கோஸ்வாமி
ஒருவர் மட்டும் மாற்றி ஊதினார். ‘இவ்விமானங்கள் எல்லாம் இஸ்லாமிய நாடான துருக்கியின் நிறுவனம் ஒன்றால் பராமரிக்கப்படுகின்றன. இதற்குப் பின்னே சதி இருக்கிறது’ என்று போயிங்கின் மீது திரும்பிய கவனத்தை மதத்தை நோக்கித் திருப்பப் பார்த்தார். இந்த தேசம் கேட்கிறது என்று, யாரையும் பேசவிடாமல் எப்போதும் தான் மட்டுமே உரத்துக் கூச்சலிடும் அந்த மனநிலை பிறழ்ந்த கோஸ்வாமியின் குரலை, அலட்சியப்படுத்தியபடி மீட்புப் பணிகள் தொடர்ந்தன. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆதாரப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளது. “விபத்தில் சிக்கியது போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம். நாங்கள் பராமரிக்க ஒப்பந்தம் போட்டிருப்பது போயிங் 777 அகலமான (Boeing B777-type wide body) ரக விமானம். இதற்கும் விபத்துக்கும் தொடர்பில்லை. விபத்தில் சிக்கிய ஏர் இந்தியாவின் 787-8 ரக விமானங்களில் எதுவொன்றையும் நாங்கள் பராமரிப்பதில்லை” என்று துருக்கி நிறுவனம் பதில் அளித்ததற்குப் பிறகு எங்கு கொண்டு போய் இந்தப் பொய் மூட்டையார் முகம் புதைப்பார்?
தப்பியவர் கழுத்தில் துளசி மாலையா?
விபத்தின் கொடூரங்களுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் நல்வாய்ப்பாகத் தப்பிய செய்திகள் உலகெங்கும் சேர்ந்தன. எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியில் ஒரு நிம்மதிச் சிறுமூச்சு எல்லோரிடமும்! உயிருடன் தப்பிய ஒரே ஒருவரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் கழுத்தில் துளசி மாலை இருந்ததால் அவர் தப்பினார் என்று இன்னொரு புரளி. ஆனால், அவர் கழுத்தில் இருந்த உலோகத்தால் ஆன சங்கிலி.
விமான நிலையத்திற்கு வந்து சேர்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக விபத்திலிருந்து தப்பிய மற்றொரு பெண் “கணபதி பாபா என்னைக் காப்பாற்றினார்” என்று சொன்னதாகச் சமூக ஊடகங்களில் படங்கள் வெளிவருகின்றன. ‘கணபதி பாபா ஏன் மிச்சமிருந்த 241 பேர் உயிரைக் கொன்றார்?’ என்று எவரும் கேள்வி எழுப்பவில்லை.
போட்டோஷூட் மாமன்னர்
விபத்தையொட்டி ஏராளமான செய்திகள் உள்ளதும், இல்லாததுமாக! புதிய பாலம் திறப்பு என்றாலும், பேரழிவு என்றாலும் தனி ஒருவராகவே நின்று மேற்பார்வையிடும் படங்கள் மட்டுமே வெளியிடக் கூடிய மற்றொருவர் லோ ஆங்கிளில் விமானத்தைப் பார்க்கும் படமும் கூட வைரல் ஆக்கப்பட்டது. அங்கும் மூன்று உடை மாற்றி போட்டோஷூட் நடத்திய மகானுபாவர்!
விபத்தின் உண்மையான காரணத்தை அறிய அதன் கருப்புப் பெட்டி கிடைக்கவேண்டும் என்று எல்லோரும் தேடினர். இன்னொரு பக்கம் விமானத்தின் காணொளிகளையெல்லாம் பதிவுசெய்து வைத்திருக்கும் டி.வி.ஆர் வீடியோ கருவி கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். ‘இதோ கிடைத்துவிட்டது’ என்றொரு குரல் கேட்டது. நடந்தது என்னவென்ற உண்மை தெரியப் போகிறது என்று எல்லோரும் ஓடினார்கள். ‘இதோ பாருங்கள் – இவ்வளவும் எரிந்த நிலையிலும் முழுதாக எரியாமல் இந்தப் புத்தகம் கிடைத்திருக்கிறது’ என்று கையில் தூக்கி நின்றார் ஒரு தன்னார்வலர். சிகை அலங்காரம் செய்பவரான அவர் பெயர் சாகர் அமின். அது பகவத் கீதை புத்தகம்.
கீதையைக் கொண்டு வந்தவர் உயிர் பிழைக்கவில்லையே!
“அடடா, 1000 டிகிரி செல்சியசில் இரும்பே உருகும் வெப்பநிலையிலும் இந்தப் புத்தகம் மட்டும் கொஞ்சமாகச் சிதைந்து கிடைத்துள்ளது. இது பகவத் கீதையின் மகாத்மியம் ஆச்சே!” என்று ஏகமாகச் செய்திகள். இன்னும் பல நூற்றாண்டுகளுக்குக் கதைவிடக் கிடைத்த வாய்ப்பு – வாட்ஸ் அப் செய்திகள் வலம் வரும்; மேடைப் பிரசங்கங்களில் கீதையை அருளிய பகவான் கிருஷ்ணனின் பிரதாபங்களுள் இதுவும் ஒன்றாய்ப் பேசப்படும்; யூ டியூப் வாந்திவாயர்கள் பலர் மீண்டும் மீண்டும் அதை அள்ளிப் பருகி மீண்டும் வாந்தியெடுப்பர்.
கேள்விகள் தொக்கி நிற்குமே! அதனால் என்ன? அந்தப் பகவத் கீதை புத்தகம் எங்கிருந்து முளைத்தது? விமானத்தில் எடுத்துவரப்பட்டதா?
யாருடைய பெட்டியில் இருந்தது? விமானத்தால் இடிபட்ட மருத்துவக் கல்லூரி விடுதியில் வைக்கப்பட்டிருந்ததா? அல்லது, யாரும் கொண்டு வந்து ‘போட்டு’, கண்டெடுத்ததா? ‘கன்டெண்ட்’ கிடைத்த பிறகு கண்டெடுத்ததெல்லாம் கேள்வியா, சார்! எப்படியோ கீதை எரிபடாமல் கிடைத்தது என்ற செய்தி பரவிவிட்டது.
கீதை மட்டுமல்ல… சுற்றி எரிந்த காட்டுத் தீயில் குர்ஆன் இருந்த வீடு மட்டும் தப்பியது என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயில் தப்பியது என்றொரு புரளி கொஞ்ச காலத்திற்கு முன் கிளம்பியது. ஊருக்கு ஊர் இப்படி ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்’ என்று மத வியாபாரிகள் லாபம் பார்க்க முனைகின்றனர். ஆனால் என்ன, ஒரே ‘டெம்ப்ளேட்’டில் இவர்களின் கதைகள் அமைகின்றன. அந்தக் காகிதப் புத்தகம் மட்டும் எரியாமல் இருப்பதில் என்ன சக்தி இருக்கிறது? அந்தப் புத்தகம் இருந்ததால் அனைவர் உயிரும் காப்பாற்றப்பட்டது என்றால் தானே சக்தி இருக்கிறது என்று பொருள்! பதில் சொல்லமாட்டார்களே ப(க்)தி வியாபாரிகள்!
தப்பி வந்த விஸ்வாஸ் குமார் கீதை வைத்திருக்கவில்லை. ஆனால், கீதை எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெட்டிக்கு உரியவர் உயிருடன் இல்லை. கீதை வைத்திருந்தவரையும் கூட ‘சக்தி’வாய்ந்த கீதை காப்பாற்றவில்லை. அந்தப் பெட்டி மட்டுமல்ல… அதைப் போல இன்னும் பலரின் பெட்டிகள் சேதாரமின்றி கிடைத்திருக்கின்றன. ”ஆனால், அவற்றிலெல்லாம் என்ன கிக் இருக்கிறது? கீதையைக் காட்டினால் தான் மதபோதை ஏறும்.”
ஆயிரம் டிகிரி வெப்பத்திலேயே அந்த ஒரு கீதைப் புத்தகம் எரியவில்லையாமே! ஜாதியையும், வர்ணாசிரமத்தையும் வலியுறுத்தி, ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ (நான்கு வருணங்களை நானே படைத்தேன்) என்று ‘பகவான்’ கிருஷ்ணன் சொன்னதால் நிலைப்பெற்றுவிட்ட நான்கு வருணங்களை ஒழிக்க, பெரியார், அம்பேத்கர் கொளுத்திய மனுஸ்மிருதியைப் போல கீதையெல்லாம் கொளுத்தப்பட வேண்டிய ஒன்று தானே! பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் கொளுத்தினால் கீதை எரியுமா, எரியாதா? சோதித்துப் பார்ப்போமா?
– சமா.இளவரசன்