சென்னை, ஜூன் 23 சென்னையில் இருந்து மும்பை செல்லக் கூடிய லோக்மானியா திலக் அதி விரைவு ரயில், சென்னை பேசின் பிரிஜ் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட 15 நிமிடங்களுக்குள் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் அலறியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கி வெளியே ஓடி வந்தனர். இது குறித்து தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது