சென்னை, ஜூன் 9- நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மாநில அரசுகள் மற்றும் கட்சிகளை கலந்து பேசாமல், ஒன்றிய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாநிலத்துக்கு மாநிலம் பாஜக மதவாத அரசியல் வடிவத்தை மாற்றி கையிலெடுக்கும். வட இந்தியாவில் விநாயகர், ராமர் அரசியலையும், மேற்கு வங்கத்தில் துர்கா, காளி அரசியலையும் முன்னெடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் முருகனை கையில் எடுக்கிறார்கள். இது அவர்களின் அரசியல் யுக்திகளில் ஒன்று.
ஆனால், பிற மாநிலங்களில் மதவாத அரசியலுக்கு மக்கள் மயங்குவதைப்போல, தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் மக்கள் மயங்கமாட்டார்கள்.
அவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் முருக பக்தர்கள் உறுதிப்படுத்துவார்கள். அவர்கள் எந்த மாநாட்டை நடத்தினாலும் தமிழ்நாட்டில் எடுபடாது.
2031இல்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற நிலை இருந்தது. நல்ல வேளையாக பாஜக ஆட்சியில் இருக்கும்போதே, 2027இல் கணக்கெடுப்பைத் தொடங்கு கிறார்கள். 2029ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலை கணக்கில் வைத்து அவர்கள் இந்நடவடிக்கையை முன்னெடுக்கிறார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதையும் வரவேற்கிறோம்.
அதன் பிறகு மேற்கொள்ளப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற கருத்து வலுவாக உள்ளது. அதனடிப்படையில் முதலமைச்சர் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தி, தென் மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார்.
அவரது கருத்தை வி.சி.க. ஆதரிக்கிறது. நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளை கலந்துபேசாமல் ஒன்றிய அரசு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.