புதுச்சேரி, ஜூன் 9 புதுச்சேரியில் ஆனந்தா இன் உணவகத்தில் நேற்று (8.6.2025) மாலை 6 மணிக்கு மேற்கண்ட விழாக்கள் வெகு எழுச்சியுடன் நடைபெற்றன. ஊர் எங்கும் கழகக் கொடி தோரணங்கள் மக்களை வரவேற்றன! எங்கு பார்த்தாலும் இந்த நிகழ்வைப் பற்றி பொதுமக்கள் பேசும் அளவிற்கு ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்தன. காலை முதல் கழகத்தினர் குடும்பம் குடும்பமாக கழகத் தலைவரை சந்தித்தனர், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், கட்சிக்கு அப்பாற்பட்ட பெருமக்களும் கழகத் தலைவரை சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடினர்.
மாலை 6 மணி அளவில் ‘ஆனந்தா இன்’ உணவக அரங்கத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா வெகு சிறப்புடன் தொடங்கியது. அரங்கம் நிறைய மக்கள் நிரம்பி வழிந்தனர். புதுச்சேரி அடுத்த பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர். மாலை 5 மணி முதல் கே. குமார் நாத்திகன், பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் இணைந்து நடத்திய சம்புகன் கலைக்குழு வழங்கிய பகுத்தறிவு இசை நிகழ்ச்சி மக்களைப் பெரிதும் கவர்ந்தது. சுயமரியாதை இயக்க கொள்கைகளை பாடல்களாக எழுச்சியுடன் இந்த குழுவினர் பாடியது மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.
விழாவிற்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமைேயற்றார். புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வே.அன்பரசன் வரவேற்புரை வழங்கினார் கருத்தரங்கத்தின் தொடக்க உரையினை திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்கினார். தொடர்ந்து ‘சுயமரியாைத இயக்கமும் புதுச்சேரியும்’ என்ற தலைப்பில் முனைவர் சிவ. இளங்கோ உரையாற்றினார். ‘புதுச்சேரியும் திராவிட இயக்கமும் நூற்றாண்டு – 100 செய்திகள்’ என்ற தலைப்பில் அவரால் சிறப்பாக தொகுக்கப்பட்ட நூலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வெளியிட, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பெற்றுக் கொண்டார். சிறப்பாக தொகுக்கப்பட்ட இந்த நூலைப் பாராட்டி நூலின் தொகுப்பாளர் சிவ. இளங்கோவுக்கு கழகத் தலைவர் பயனாடை போர்த்தி, தந்தை பெரியார் சிலையை வழங்கி பாராட்டி சிறப்பு செய்தார். திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ‘சுயமரியாதை இயக்க போர் ஆயுதங்கள்’ என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்.
‘‘சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்’’ என்ற தலைப்பில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார்; ‘சுயமரியாதை இயக்க வீரர்கள்’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் கருத்துரை ஆற்றினார். நிறைவுரையாக தலைவர் தமிழ் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பல்வேறு வரலாற்று தகவலுடன், சுயமரியாதைச் இயக்கத்தின் சாதனை, வரலாற்றில் குடிஅரசின் பங்கு குறித்தும், புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் பற்றியும் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.
கடைசி வரை மக்கள் அமர்ந்து கருத்துரைகளை செவி மடுத்தனர். சுயமரியாதைச் சுடரொளிகள் என்கின்ற போது புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவு கண்டிப்பாக வரும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பொறுத்தவரையில், பெரும் கவிஞராக மட்டும் இல்லை அவர் இயக்கவாதியாக செயல்பட்டு இருக்கிறார். கழகம் இல்லாத இடங்களில் கிளைக் கழகங்களைத் துவக்குங்கள், கழகக் கொடி பறக்காத ஊர்களில் கழகக் கொடி ஏற்றுங்கள் ‘விடுதலை’ சந்தா வராத இடங்களில் ‘விடுதலை’யை வரவழைக்க முனைப்பு காட்டுங்கள் – என்பது உட்பட கழக வாதியாக இயக்ககவாதியாக அவர் பணியாற்றியதை பற்றி எல்லாம் கருத்தரங்கில் பேசப்பட்டது.
சுயமரியாதைத் தொண்டர்கள் என்கின்ற பொழுது காரைக்கால் பகுதியில் சி.மு. சிவம், புதுச்சேரியில் கவிஞர் சிவம் என்ற சிவப்பிரகாசம் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார்கள். கவிஞர் சிவம் பற்றிய கண்காட்சியும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் புதுவை மாநில பகுத்தறிவு எழுத்தாளர், மன்ற துணை பொதுச்செயலாளர் இளவரசி சங்கர் சிறப்பாக இணைப்புரையை வழங்கினார். புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் மு குப்புசாமி நன்றி கூறினார். விழாவில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது; மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகளின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார் கழக தலைவர். (தனியே காண்க).
அவர்களுக்கு தந்தை பெரியார் சிலையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வழங்கினார். முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்களுக்கு சால்வை அணிவித்து பெரியார் சிலைகள் வழங்கப்பட்டன. பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளித்தோர் – மறைந்த புதுவை மாநில திராவிடர் கழக தலைவர் சி.மு. சிவம் அவர்களின் மகன் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, மகன் வி. அழகரசன் ஆகியோர் இணைந்து பெரியார் உலகத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை கழகத் தலைவரிடம் வழங்கினர். அதேபோல மறைந்த பெரியார் பெருந்தொண்டர், பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர் மு.ந.நடராஜன் குடும்பத்தினர் அவரது மகன் நடராஜன் பாஸ்கர் ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
புதுச்சேரி விழாவில்
பெரியார் பெருந்தொண்டர்களின்
கொள்கை வழி வாரிசுகளுக்குப்
பயனாடையும் & பெரியார் சிலையும்
1. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பேரன் கோ. பாரதி.
2. புதுவை சிவப்பிரகாசம் பேரன் இள. கோவலன்
3. பொன். இராமலிங்கம் – மகள்
சின்னம்மாள் என்ற பத்மினி.
4. மா. நோயல் – பேரன் மு. தமிழரசன்
5. எஸ்.என். சாமிநாதன் பேரன் நெ. நடராசன்
6. கு. கலைமணி – மகள் க. தேவி
(காரைக்குடி குடும்ப உறுப்பினர் சார்பாக)
7. மு. துரைசாமி – மகன் து. ராமசாமி.
8. வ.சு. சம்பந்தம் – மகன் ச. இளங்கோ
9. காரை சி.மு. சிவம் – பேரன் வீ. அழகரசன்
10. ப. கனகலிங்கம் – பேரன் பாலசுப்ரமணி
திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை பெரியார் உலகத்திற்கு கழகத் தலைவரிடம் வழங்கினார். வழங்கிய பெருமக்களுக்கு கழக தலைவர் பயனாடை அணிவித்து தந்தை பெரியார் சிலையை அளித்து பாராட்டி மகிழ்ந்தார். புதுச்சேரியை பொறுத்தவரையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மிக சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்ற விழாக்களாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டும், குடிஅரசு நூற்றாண்டும் நடைபெற்றது குறிப்பிடத்திருந்ததாகும். அரும்பாடு பட்ட கழகத் தோழர்களை, பொறுப்பாளர்களை கழகத் தலைவர் வெகுவாகப் பாராட்டி மகிழ்ச்சியினை தெரிவித்தார்.