தமிழ்நாடு கிராம உதவியாளர் பணி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு வாசித்தல், எழுதும் திறனுக்கு முன்னுரிமை!

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 7- தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, வாசித்தல், எழுதும் திறனுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்குவதில் தொடர்பான அம்சங்களில் மாற்றங் களைக் கொண்டு வருவாய் நிர்வாக ஆணையர் சார்பில் அரசுக்கு கருத்துகள் அனுப்பப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், கிராம உதவியாளர் பணி நியமனத்தில் சில வழிகாட்டு நெறி முறைகளை புதிதாக பின்பற்ற வேண்டும்.

தமிழில் தேர்வு

கிராம உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

இந்த நடைமுறையுடன் புதிதாக விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்திருந்தாலும் அல்லது தேர்ச்சி அடையவில்லை என்றாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தாலும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

கிராம உதவியாளர் பணிக்கென நடைபெறும் நேர்காணலின் போது, வாசித்தல் மற்றும் எழுதும் திறன் சோதிக்கப்படும். விண்ணப்பதாரரின் வாசிக்கும், படிக்கும் திறனுக்கேற்ப மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையில்…

கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் முறையாக உரிய வழிமுறைகளின்படி வெளியிடப்படுவதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வை யிட வேண்டும். கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறை, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே, தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் வெளி யிடப்பட வேண்டும்.

கிராம உதவியாளர் தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளங்களில் வெளியி டப்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் விதி மீறல்கள் நிகழ்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *